நாமக்கல், மார்ச் 1: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களுக்கு 30 டூவீலர் ரோந்து வாகனங்களை டிஐஜி பயன்பாட்டிற்கு வழங்கினார்.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும், டூவீலர் ரோந்து வாகனம் வழங்கப்படுகிறது. இந்த வாகனங்களில் ஜிபிஎஸ், சைரன் ஆகியவை பொருத்தப்பட்டு காவல் கட்டுப்பாட்டு அறையின் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படும். இதையொட்டி, நாமக்கல் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நேற்று, மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களுக்கு ஜிபிஎஸ் கருவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சேலம் சரக டிஐஜி உமா கலந்துகொண்டு, போலீசாருக்கு ரோந்து வாகனங்களை வழங்கினார். மேலும், போலீசாருக்கு இலவச பஸ் பாஸ்களையும் வழங்கினார். நிகழ்ச்சியில் எஸ்பி ராஜேஸ்கண்ணன், ஏஎஸ்பி ஆகாஸ் ஜோஸி மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து எஸ்பி ராஜேஸ்கண்ணன் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களுக்கு, ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு 30 டூவீலர்கள் வழங்கப்பட்டுள்ளது. அதில், ஜிபிஎஸ் கருவி, பிளிங்கர்ஸ் லைட், பப்ளிக் அட்ரசிங் சிஸ்டம் சைரன் போன்றவை பொருத்தப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் அனைத்தும், எஸ்பி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையின் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படும். மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு, எஸ்பி அலுவலகத்தில் இருந்து குற்றவாளிகளை கண்காணிப்பதற்கான செயலிகள், அவசர அழைப்புகளை தொடர்பு கொள்வதற்கான காவல் உதவி செயலிகள் குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது.
சுழற்சி முறையில், 24 மணி நேரமும் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். இதன்மூலம் காவல் துறைக்கு வரும் அவசர அழைப்புகளுக்கு, உடனடியாக சம்பவ இடம் சென்று துரித நடவடிக்கை மேற்கொள்ளும் வகையிலும், காவல் நிலைய எல்லை பகுதியில் 24 மணி நேரமும் ரோந்து பணியிலும் ஈடுபட முடியும். இரண்டாம் கட்டமாக மேலும் 30 வாகனங்கள் வழங்கப்படும். தமிழக முதல்வர் உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் முதல் போலீசார் வரை, மாவட்ட எல்லைக்குள் அரசு பஸ்களில் இலவச பயணம் மேற்கொள்ள, இலவச பஸ் பாஸ், டிஜஜி மூலம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு எஸ்பி ராஜேஸ்கண்ணன் தெரிவித்தார்.
The post காவல் நிலையங்களுக்கு 30 டூவீலர் ரோந்து வாகனங்கள் appeared first on Dinakaran.