கார் ஏற்றி பெண்ணைக் கொன்றுவிட்டு வெளிநாடு தப்பிய வாலிபர் ஏர்போர்ட்டில் கைது

4 months ago 12

கோவை: கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் பேபி (68). இவரது பேத்தி திரிஷ்னா (9). இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி பொருட்கள் வாங்க வெளியே சென்றனர். அவர்கள் இருவரும் வடகரா தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயற்சி செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரில் பேபி படுகாயமடைந்த இறந்தார். திரிஷ்னா கோமா நிலைக்கு சென்றார். இதுகுறித்து கோழிக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தீவிர விசாரணைக்குப் பிறகு ஒரு மெக்கானிக் ஷெட்டில் விபத்து ஏற்படுத்தியக் காரை கண்டுபிடித்தனர்.

அந்தக் கார் ஐக்கிய அரபு எமிரேட்சில் பணிபுரிந்து வரும் கோழிக்கோட்டை சேர்ந்த ஷஜீல் (35) என்பவருடையது என்றும், கார் சுவரில் மோதி சேதமடைந்ததாக கூறி பழுது பார்க்கவிட்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் ஷஜீல் விபத்து ஏற்படுத்திவிட்டு ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு தப்பிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஷஜீல் காரில் செல்லும்போது கவனக்குறைவாக விபத்தை ஏற்படுத்தி பயத்தில் நிற்காமல் சென்றதாக குடும்பத்தினர் கூறினர்.

தொடர்ந்து போலீசார் ஷஜீலை தொடர்புகொண்டு போலீஸ் நிலையத்துக்கு வரும்படி அறிவுறுத்தினர். ஆனால் பல மாதங்களாகியும் அவர் வராததால் போலீசார் அவர் மீது லுக்அவுட் நோட்டிஸ் பிறப்பித்தனர். இந்த நிலையில் ஷஜீல், ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்து பின்னர் கோழிக்கோடு செல்ல இருப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து கோழிக்கோடு போலீசார் கோவை விமான நிலையத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு, ஷஜீல் விமானத்தில் இருந்து இறங்கியதும் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை கோழிக்கோடு அழைத்து சென்றனர்.

The post கார் ஏற்றி பெண்ணைக் கொன்றுவிட்டு வெளிநாடு தப்பிய வாலிபர் ஏர்போர்ட்டில் கைது appeared first on Dinakaran.

Read Entire Article