காருடன் ₹3.80 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல் தப்பி ஓடிய டிரைவருக்கு போலீஸ் வலை

2 months ago 10

பொன்னை, நவ.16: பொன்னை அருகே போலீசார் வாகன சோதனையில் காரில் கடத்தி வந்த ₹3.80 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, தப்பி ஓடிய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். காட்பாடி அடுத்த பொன்னை அருகே மாநில எல்லை பகுதி வழியாக தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பொன்னை எஸ்ஐ முரளிதரன் தலைமையிலான போலீசார் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பொன்னை கே.என்.பாளையம் மாநில எல்லை சோதனை சாவடி வழியாக வடமாநில பதிவு எண் கொண்ட கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அதனை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். இதில் போலீசாரை கண்டதும் காரை ஓட்டி வந்த நபர் காரை நிறுத்திவிட்டு இறங்கி தப்பி ஓடிவிட்டார். அவரை விரட்டி பிடிக்க முயன்றும் முடியவில்லை. இதனை அடுத்து போலீசார் காரில் சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட ₹3.80 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் காருடன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

The post காருடன் ₹3.80 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல் தப்பி ஓடிய டிரைவருக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Read Entire Article