காரில் ரூ.2 கோடி மதிப்பிலான யானை தந்தம் கடத்திய பெண் உள்பட 8 பேர் கைது

11 hours ago 5

செங்கல்பட்டு: சென்னையில் இருந்து கார் மூலமாக ரூ.2 கோடி மதிப்பிலான யானை தந்தம் கடத்திய பெண் உள்பட 8 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக காரில் யானை தந்தம் கடத்தப்படுவதாக செங்கல்பட்டு வனச்சரக அதிகாரிகளுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் வனச்சரக அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே சந்தேகத்திற்கிடமாக அதிவேகமாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, காரின் உள்ளே மறைத்து வைத்திருந்த இரண்டு யானை தந்தம் சிக்கியது. இதையடுத்து, வனத்துறை அதிகாரிகள் காரில் வந்த 4 பேர் மற்றும் சுங்கச்சாவடி அருகே யானை தந்தம் வாங்கிச் செல்ல காத்திருந்த ஒரு பெண் உள்பட 8 பேரையும் செங்கல்பட்டு வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

அதில், சென்னையில் இருந்து ரூ.2 கோடி மதிப்பிலான யானை 2 தந்தங்களை விற்பனை செய்ய காரில் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, யானை தந்தம் கடத்தலில் ஈடுபட்ட பெண் உள்பட 8 பேர் மீது வனத்துறையினர் வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும், யானை தந்தங்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், 8 பேரையும் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post காரில் ரூ.2 கோடி மதிப்பிலான யானை தந்தம் கடத்திய பெண் உள்பட 8 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article