திங்கள்சந்தை: கட்டிமாங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட காரங்காடு – காட்டுவிளை – ஆளூர் சாலையில் திறந்தவெளியில் உணவு, இறைச்சி உள்ளிட்ட கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம் கட்டிமாங்காடு ஊராட்சி மன்றம் காரங்காட்டில் இருந்து காட்டுவிளை வழியாக ஆளூர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை காரங்காடு, தெற்கு மணக்காவிளை, கடுவாவிளை, காட்டுவிளை, ஆளூர் உள்ளிட்ட பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த சாலை ஓரம் காரங்காடு பகுதியில் குப்பைகளை கொட்டும் சம்பவம் நடந்து வருகிறது. கட்டிமாங்கோடு ஊராட்சி பகுதியில் இருந்து சேமிக்கப்படும் குப்பைகள் இந்த சாலையின் வளைவு பகுதியில் குவித்து வைக்கப்படுவதும், பின்பு எரிக்கப்படுவதும் அடிக்கடி நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த குப்பைகள் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. அதேபோன்று தெரு நாய்கள் குப்பைகள், இறைச்சி, உணவு கழிவுகளை கிளறுவதால் தெருநாய் அச்சமும் ஏற்பட்டுள்ளது. இவை இழுத்து செல்லும் உணவு கழிவு உள்ளிட்ட குப்பைகள் அருகில் உள்ள ஊட்டு கால்வாய்கள் வழியாக தண்ணீரில் கலக்கிறது. இதனால் தண்ணீர் மாசடைந்து நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் கொட்டப்பட்டும் எரிக்கப்பட்டும் கிடக்கும் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். ஊராட்சி நிர்வாகம் சாலையோரம் குப்பைகளை கொட்டி எரிப்பதை நிறுத்துவதுடன், யாரும் குப்பைகளை கொட்டாதவாறு எச்சரிக்கை பலகை வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post காரங்காடு – காட்டுவிளை – ஆளூர் சாலையில் திறந்தவெளியில் கொட்டப்படும் உணவு, இறைச்சி கழிவுகள்: சுகாதார சீர்கேட்டால் மக்கள் அவதி appeared first on Dinakaran.