கான்ட்ராக்ட் காலியாகி விடும் கவலையில் இருக்கும் மாஜி மந்திரியின் உறவினர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

6 months ago 17

‘‘சர்ச்சைக்கு பேர் போன தாமரை பார்ட்டி மாநில துணை தலைவரு நடத்தின மாங்கனி சிட்டி ஆலோசனை கூட்டத்தை முக்கிய நிர்வாகிங்க புறக்கணிச்ச கதை தெரியுமா..’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா.
‘‘தாமரை பார்ட்டியில் சர்ச்சைக்கு பேர் போன மாநில துணைத்தலைவரு, மாங்கனி சிட்டியில் ஒரு ஆலோசனை கூட்டத்திற்கு வரப்போகிறேன். அதில் என்னுடன் மேலிட பார்வையாளர் ஒருத்தரும் வரப்போறாருன்னு தகவல் கொடுத்தாராம்.. இந்த சேதி சிட்டிக்கான பார்ட்டியின் குரூப்பில் பகிரப்படவில்லையாம்.. சிட்டியில் நடக்கும் மீட்டிங், இங்குள்ள நிர்வாகிகள் யாரும் தகவல் தரவில்லையே? இது ஏன் என்ற சந்தேகம் மீடியாக்களுக்கு வலுத்ததாம்.. சரி., மீட்டிங் அட்டென்ட் பண்ணுவோம்.. என்ன நடக்குதுன்னு பார்ப்போம் என்று மீடியாக்கள் திரண்டதாம்.. ஆனால் மாங்கனி சிட்டி முக்கிய நிர்வாகிகள், மூத்த நிர்வாகிகள் என்று ஒருத்தர் கூட தென்படலையாம்..

அதே நேரத்தில் மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி தாமரை பார்ட்டியில் இணைந்த சிலர், மீட்டிங்கில் தென்பட்டாங்களாம்.. அவங்களும் மாங்கனி நகர நிர்வாகிகள் யாரும் கூட்டத்தில இல்லையே, நாம தெரியாம இந்த கூட்டத்திற்கு வந்துட்டோமோ என்ற குழப்பத்தில் இருந்தாங்களாம்.. இதுகுறித்து மூத்த நிர்வாகி ஒருத்தரிடம் கேட்டபோது, ‘ஏற்கனவே பல்வேறு பார்ட்டிகளில் இருந்தவருதான், இப்போ மாநில துணைத்தலைவரா இருக்காரு. அவரு காலம் காலமாக பார்ட்டியில் இருக்கும் சிட்டி நிர்வாகிகளை சமீபத்தில் ஏகத்துக்கும் வறுத்தெடுத்தாரு.. இதன் தாக்கம்தான் சிட்டியின் முக்கிய தலைகள் வராததற்கு காரணம்னு போட்டு உடைத்துவிட்டாராம்..’’ என்றார் விக்கியானந்தா
‘‘மோசடி வழக்கில் சிக்கியதற்கு பின் தாமரைக்கு எதிராக ரியாக்‌ஷன் காட்டாமல் அமைதியாக இருக்கிறாராமே இலை கட்சி மாஜி அமைச்சர்..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தை சேர்ந்த இலை கட்சி மாஜி அமைச்சர், மோசடி வழக்கில் சிக்கியதற்கு பின் தாமரை கட்சிக்கு எதிராக பெரிய அளவுக்கு ரியாக்‌ஷன் காட்டாமலும், எதிராக எந்த ஒரு கருத்தையும் தெரிவித்து விடக்கூடாது என்பதில் ஒரு முடிவா இருக்கிறாராம்.. இதற்கான காரணம் என்ன என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்து வரும் தலைமை, மாஜியானவரின் நடவடிக்கை குறித்து ரகசியமாக கண்காணித்து வருகிறதாம்.. மோசடி வழக்கில் சிக்கியதற்கு பின் மாஜியானவரை தலைமை எந்த இடத்தில் வைத்து உள்ளது எனவும் தெரிய வில்லை. ஆனால் தலைமை நினைத்தாலும் டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தில் அவரை எந்த காரணத்தை காட்டியும் ஓரங்கட்ட முடியாது என்று அவரது ஆதரவாளர்களுக்குள்ளே பேசிக்கிறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஒப்பந்தம் போடும் சாலைகள் எல்லாம் குறுகிய காலத்திலேயே பல் இளிப்பதால் எப்போது வேண்டுமானாலும் ஒப்பந்தத்தில் வெட்டு விழலாம் என கலக்கத்தில் உள்ளாராமே மாஜி அமைச்சரின் உறவினர் ஒருத்தர்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘வனம் பெயர் கொண்ட ஏரியாவில் மாஜி அமைச்சரின் உறவினரான அந்த குமாரரானவர் சாலைப் பணிகளை ஒப்பந்தம் எடுப்பதில் கை தேர்ந்தவராம்.. ஆட்சி மாறினாலும், காட்சி மாறாது என்கிற வகையில் எந்த மாற்றமும் இருக்காதாம்.. அந்தளவுக்கு தாராள மனம் கொண்ட குமாரரானவர், தற்போது மாஜிக்கு செல்வாக்குமிக்க இடங்களில் சாலை பணிகளை மட்டுமின்றி நகராட்சி நிர்வாகம் மூலமாகவும் அதிக ஒப்பந்தங்களை வளைத்து விடுகிறாராம்.. இதன் மூலம் கிடைக்கும் கணிசமான பங்கில், மாஜியின் கட்சி நிகழ்ச்சிகளுக்கு பிரதான ஸ்பான்சராக கைமாறுவதுடன் ரகசிய சந்திப்புகளுக்கும் பஞ்சமில்லையாம்.. இதன் எதிரொலியோ என்னவோ, ஒப்பந்தம் போடும் சாலைகளில் பெரும்பாலானவை குறுகிய காலத்திலேயே பல் இளிக்கிறதாம்.. சில இடங்களில் ஜல்லி பரப்பிய நிலையிலேயே கிடப்பில் பணிகள் இருக்கிறதாம்.. இதனால் அன்றாடம் அவதியுறும் உள்ளூர்வாசிகள் இதை தடுக்க வேண்டியவர்களுக்கு முறைப்படி புகார் கடிதத்தை எழுதி உள்ளார்களாம்.. எப்போது வேண்டுமானாலும் ஒப்பந்தத்தில் வெட்டு விழலாம் என்பதால் கதிகலக்கத்தில் இருக்கிறதாம் ஒப்பந்தம் தரப்பு..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலைக்கட்சியின் செயல்பாடுகளால் கோட்டையாக இருந்த தொகுதி ஓட்டையாகிட்டே வருதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.‘‘ஹனீபி மாவட்டத்தில் சேலத்துக்காரர், பலாப்பழக்காரர் ஒன்றாக இருந்தபோது இலைக்கட்சியின் மறைந்த முன்னாள் முதல்வரின் பிறந்த நாள், நினைவு நாள் விழாவை கொண்டாட தவறுவதில்லை. தற்போது இந்நிகழ்வுகளை அவ்வளவாக கண்டுகொள்வதில்லையாம்.. கடந்த வாரம் அந்த கட்சியின் மறைந்த தலைவிக்கு நினைவு நாள் வந்தது. இந்நாளை இரு தரப்பினரும் சிறப்பாக அனுசரிப்பாங்கன்னு இருதரப்பு ஆதரவாளர்களும் எதிர்பார்த்திருந்தனராம்.. ஆனால், ரெண்டு தரப்பிலுமே பெயரளவுக்கு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டதோடு, அரிதாக ஒரு சில இடங்களில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டதோடு சரி… மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே, இலைக்கட்சியின் செயல்பாடுகள் மந்தமாகவே இருக்கின்றதாம்.. கோட்டையாக இருந்த ெதாகுதி ஓட்டையாகிட்டே வருது.. தலைமை நியமிச்ச மாவட்ட முக்கிய நிர்வாகிகள் செயல்பாடுகளும் எதிர்பார்த்த அளவு இல்லை.. இப்படியே போனால் கட்சின்னு ஒண்ணு இருப்பதே தெரியாமல் போய்டும்னு இலைக்கட்சி தொண்டர்கள் குமுறுகின்றனராம்.. இப்படியே போனால் தொண்டர்கள் அணி மாறுவதை, தலைமை கட்டுப்படுத்த முடியாது என நிர்வாகிகள் புலம்பல் தலைமைக்கு கேட்டும் பிரயோஜனமில்லையாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘யாருமே வராத சோதனை சாவடியில நின்னு கணக்கு காட்டுற காக்கிகளை கண்காணிக்க வேண்டுமாமே எங்கேயாம்..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘வெயிலூர் மாவட்டம், ஆந்திர மாநில எல்லையில இருக்குறதால, ரேஷன் ரைஸ் கடத்தல் சம்பவங்கள் தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருது.. ஆனாலும், ரயில்கள்லயும், சரக்கு வாகனங்கள்லயும் கடத்தல் நடந்துகிட்டுத்தான் இருக்குது.. சில மாதத்துக்கு முன்னாடி வரைக்கும், சரக்கு வாகனங்கள்ல டன் கணக்குல ரேஷன் அரிசிகளை பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைச்சாங்க.. தற்போது சில மாதங்களாக கடத்தல் சம்பவங்களை தடுக்காம, வெயிலூர் புட்செல் காக்கிகள் தொலை தொடர்புக்கு அப்பால் இருக்குறாங்களாம்.. கடத்தலை கண்டுக்குறதே இல்லையாம்.. ரெய்டுன்ற பெயர்ல ஏதோ ஒரு இடத்துல போய்ட்டு யாருமே வாராத சோதனைச்சாவடியில நின்னு கணக்கு காட்டி வர்றாங்களாம்.. இதனால் ரேஷன் ரைஸ் கடத்தல் அதிகரிச்சிருக்குதாம்.. சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிங்க கண்காணிப்பை அதிகரிச்சாத்தான், இவங்க கண்காணிப்பு கரெக்டா இருக்கும்னு விஷயம் தெரிஞ்ச காக்கிகள் பேசிக்கிறாங்க..’’ என்று முடித்தார் விக்கியானந்தா. 

 

The post கான்ட்ராக்ட் காலியாகி விடும் கவலையில் இருக்கும் மாஜி மந்திரியின் உறவினர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article