காதலுக்கு எதிர்ப்பு... பெற்றோர் கண் முன்னே ஏரியில் குதித்து இளம்பெண் தற்கொலை

6 hours ago 3

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கல்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி இளங்காளி. இவர்களுக்கு ரேணுகாதேவி (வயது 24), சந்தியா, சரண்யா ஆகிய 3 மகள்கள் இருந்தனர். இதில் ரேணுகாதேவி பி.காம் முடித்து விட்டு தற்போது பாராசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அப்போது ரேணுகாதேவி ஒருவரை காதலித்து வந்ததாகவும் அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு 7 மணி அளவில் ஆரணி அடுத்த மேல்சீசமங்கலம் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொள்வதற்காக ரேணுகாதேவி சென்றுள்ளார். இதை அறிந்த அவரது பெற்றோர் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். பெற்றோர் பின்தொடர்ந்து வருவதை அறிந்த ரேணுகாதேவி வேகமாக ஏரி தண்ணீரில் இறங்கி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் 'ஏரியில் இறங்காதே' என்று கூறியபடி அவர்களும் ஏரியில் இறங்கி உள்ளனர்.

ஆனால் அவர்களுக்கு நீச்சல் தெரியாததால் அதிக தூரம் ஏரியில் இறங்க முடியவில்லை. இதனால் ஏரியில் இறங்கிய ரேணுகாதேவி நீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். இதைப்பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதனர். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் ரேணுகாதேவி தண்ணீரில் மூழ்கிவிட்டார். அவரை பொதுமக்கள் தேடத்தொடங்கினர்.

மேலும் இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலர் பூபாலன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று இரவு 7.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை தேடினர். ஆனால் அவரை மீட்கமுடியவில்லை. அதைத்தொடர்ந்து தேடும் பணியை கைவிட்டனர். இதையடுத்து நேற்று காலை 6 மணிக்கு மீண்டும் தேடுதல் பணியை தொடங்கினர். காலை 7.30 மணியளவில் ரேணுகா தேவியின் உடலை அவர்கள் மீட்டனர்.

மேலும் இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் வேல்முருகன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர் கண்முன்னே ஏரியில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article