காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பயங்கரம்; இன்ஸ்டா காதலனுடன் சேர்ந்து தாய் மீது உரலை போட்டு கொன்ற மகள்: தெலங்கானாவில் பரபரப்பு

9 hours ago 2

திருமலை: தெலங்கானா மாநிலம், ஐதராபாத் ஜீடிமெட்லாவில் உள்ள என்எல்பி நகரைச் சேர்ந்தவர் அஞ்சலி. கணவரை பிரிந்த இவர், தெலங்கானா கலாச்சார பிரிவில் நாட்டுப்புற பாடகியாகி இருந்தார். இவருக்கு 2 மகள்கள் உள்ள நிலையில், 16 வயதுடைய மூத்த மகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கும், நல்கொண்டாவைச் சேர்ந்த டி.ஜே பிளேயரான பகில்லா சிவா(19) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் காதலித்து வந்தனர்.

இவர்களின் காதல் விவகாரம் தாய் அஞ்சலிக்கு தெரியவரவே, அவர் சிறுமியை கண்டித்து வந்துள்ளார். இதற்கிடையில் சிறுமி கடந்த 5 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு சிவாவுடன் வீட்டைவிட்டு வெளியேறினார். இதுகுறித்து அஞ்சலி போலீசில் கொடுத்த புகாரின் பேரில், சிறுமியை போலீசார் மீட்டு வந்து தாய் அஞ்சலியிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் நேற்று காலை காதலன் சிவா, அவரது தம்பி பகில்லா யஷ்வந்த்(19) ஆகியோர் சிறுமியின் வீட்டிற்கு வந்தனர். அங்கு சிறுமி, சிவா, பகில்லா யஷ்வந்த் ஆகியோர் இணைந்து தாய் அஞ்சலியை சரமாரியாக தாக்கி துப்பட்டாவால் கழுத்தை நெரித்தனர். பின்னர் உரலை அஞ்சலி தலையில் போட்டு கொன்றனர். தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து சிறுமி, சிவா, பகில்லா யஷ்வந்த் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பயங்கரம்; இன்ஸ்டா காதலனுடன் சேர்ந்து தாய் மீது உரலை போட்டு கொன்ற மகள்: தெலங்கானாவில் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article