
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சலேட்நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் சுபித் (வயது22). இவர் பி.எஸ்சி. பயோடெக்னாஜி படித்துள்ள சுபித் மணவாளக்குறிச்சியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். கல்லூரி படிக்கும்போது சுபித்தும் அதே கல்லூரியில் படித்துவந்த ஒரு மாணவியும் காதலித்து வந்துள்ளனர். காதலி தன்னை தான் திருமணம் செய்வார் என அவர் உறுதியாக நம்பியிருந்தார்.
இதனிடையே, கடந்த வாரம் அந்த பெண்ணிற்கு வெறொரு நபருடன் திருமணம் நடந்துள்ளது. இது குறித்து அறிந்த இளைஞர் சுபித் மிகவும் மன உளைச்சல் அடைந்துள்ளார். அவரை உறவினர்களும், நண்பர்களும் தேற்றி வந்தனர்.
இந்நிலையில், காதலிக்கு வெறொரு நபருடன் திருமணம் ஆனதை தாங்கி கொள்ள முடியாத சுபித் கடந்த 31-ம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை வீட்டில் உள்ளவர்கள் மீட்டு குளச்சலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று சுபித் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலிக்கு வெறொரு நபருடன் திருமணமானதால் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.