
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள வசந்த் கஞ்ச் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், கடந்த 7 ஆண்டுகளாக சங்கர் கேம்ப் பகுதியை சேர்ந்த ரேஹான் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவந்த நிலையில், அவரது குடும்பத்தினர் இந்த காதலை ஏற்றுக்கொண்டனர்.
இதனிடையே, டெல்லி விமான நிலையத்தில் ஊழியராக வேலை செய்து வரும் ரேஹான், இளம்பெண்ணின் குடும்பத்தினரிடம் தனது சாதி அடையாளத்தை மாற்றி கூறியதாக கூறப்படுகிறது. மேலும், திருமணம் செய்து கொள்வதாக ஆசைகாட்டி இளம்பெண்ணுடன் ரேஹான் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இதன் விளைவாக அப்பெண் 2 முறை கர்ப்பமாகி, பின்னர் கர்ப்பத்தை கலைத்துள்ளார்.
இந்த நிலையில், இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ரேஹானிடம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த ரேஹான், இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன அந்த பெண், தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் ஆசிட்டை குடித்துள்ளார்.
இதையடுத்து அந்த பெண்ணின் பெற்றோர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆசிட்டை குடித்ததால் அந்த பெண்ணின் உள்உறுப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், அவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேஹானை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.