காதலனுக்கு'டீ'யில் எலி மருந்து கலந்து கொடுத்து ஏன்? கைதான மாணவி பரபரப்ப பேட்டி

3 hours ago 1

திருவெண்ணெய்நல்லூர்,

விழுப்புரம் அருகே காதலனுக்கு 'டீ'யில் எலி மருந்து கலந்து கொடுத்த மாணவி அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் எதற்காக விஷம் கொடுத்தார் என்பது குறித்து போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

விழுப்புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 23 வயதுடைய வாலிபர் ஒருவர், ஆந்திர மாநிலத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் தனது வீட்டிலேயே இ-சேவை மையமும் வைத்துள்ளார். இவருக்கும், தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும் 20 வயதுடைய மாணவிக்கும் 2 ஆண்டுக்கு முன்பு காதல் ஏற்பட்டது. ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இவர்களது காதல் விவகாரம் இருவீட்டு பெற்றோருக்கு தெரிந்ததும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருவரும் அண்ணன், தங்கை உறவு முறை என்று தெரிந்ததும் முறை தவறிய காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே கடந்த சில நாட்களாக வாலிபர், தனது காதலியுடன் பேசுவதை தவிர்த்தார். இருப்பினும் அந்த மாணவி, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்தார்.

இந்த நிலையில் மாணவி, தனது காதலனை தனது வீட்டிற்கு அழைத்து வந்து காலாவதியான எலி மருந்தை 'டீ'யில் கலந்து கொடுத்துள்ளார். அதை குடித்த அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து மாணவரின் தந்தை, திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை நேற்று கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. போலீசாரிடம் மாணவி கூறியதாவது:-

அண்ணன்-தங்கை உறவு முறை வருவதாக கூறி எங்களது திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். 2 ஆண்டாக ஆசை, ஆசையாக காதலித்த காதலனை திருமணம் செய்யக்கூடாது, அவரிடம் பேசக்கூடாது என்று கூறுகிறார்கள். என்னால் அவரை மறக்க முடியாது. எனவே காதலித்தவரையே திருமணம் செய்ய என்ன செய்யலாம் என்று யோசித்தேன். இருவரில் யாராவது விஷம் குடித்தது போன்று நடித்தால் பெற்றோர் திருமணம் செய்து வைத்துவிடுவார்கள் என்று காதலனிடம் கூறினேன். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார். அதன்படி அவரை வீட்டிற்கு அழைத்து 'டீ'யில் எலி மருந்து(விஷம்) கலந்து கொடுத்து விட்டேன். குடித்த சில நிமிடங்களிலேயே மயங்கி விழுந்த அவரது வாயில் இருந்து நுரை தள்ளியது. உடனே உறவினர்கள் மூலம் ஆஸ்பத்திரியில் சேர்த்தேன்.மற்றபடி அவரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கம் எனக்கு கிடையாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Read Entire Article