கொடைக்கானல், ஜன.14: கொடைக்கானல் செண்பகனூர் பகுதியில் காட்டுப்பன்றி தாக்கியதில் முதியவர் படுகாயமடைந்தார். கொடைக்கானல் மலை பகுதிகளில் காட்டெருமை, காட்டு பன்றி, சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து நகர் பகுதி மட்டுமின்றி விவசாய நிலங்களுக்குள் புகும் வனவிலங்குகள், பொதுமக்களை அச்சுறுத்தியும் விவசாய நிலங்களை சேதப்படுத்தியும் வருகின்றன. இந்நிலையில், நேற்று செண்பகனூர் கார்மேல்புரம் பகுதியில் கட்டிடப் பணிக்காக முருகன் என்பவர் செல்லும் போது வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு பன்றி ஒன்று அவரை தாக்கியதில் படுகாயமடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் வன விலங்குகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
The post காட்டு பன்றி தாக்கி முதியவர் படுகாயம் appeared first on Dinakaran.