
108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில். இந்த கோவிலில் பெருமாள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
இந்த கோவிலில் பெருமாளை ஐராவதம் யானையே மலையாக நின்று தாங்குவதாக ஐதீகம். எனவே இந்த திருத்தலத்திற்கு 'அத்திகிரி' என்றும் பெயரும் உண்டு. வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
வைகாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய திருவிழாக்களாக 3-ம் நாள் கருட சேவை உற்சவமும், 7-ம் நாள் தேரோட்டமும், 9-ம் நாள் தீர்த்தவாரி உற்சவமும் வெகு விமரிசையாக நடைபெறும்.
அந்த வகையில் சிறப்பு மிக்க வைகாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய திருவிழாவான தேரோட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. மேளங்கள் முழங்க, 'கோவிந்தா' கோவிந்தா என்ற கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். தேரோட்டத்தையொட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.