காசாவில் உணவு வாங்க சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு- 6 பேர் பலியானதாக தகவல்

3 hours ago 2

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் 1200 பேரை கொன்று குவித்தது. 251 பேரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து காசாவுக்கு எதிரான போரை இஸ்ரேல் தொடங்கியது. ஓராண்டுக்கு மேலாக நடந்து வரும் இந்த தாக்குதலில், இதுவரை 54,900 பாலஸ்தீனர்கள் உயிரிழந்து உள்ளதாகவும், 1.25 லட்சம் பேர் காயமடைந்திருப்பதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில் இஸ்ரேல் கைதிகள் மற்றும் பாலஸ்தீன கைதிகள் பரஸ்பரம் விடுவிக்கப்பட்டனர். இந்த முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் மார்ச் 1-ந்தேதியுடன் முடிவடைந்தது. முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவடைந்த சூழலில், 2-வது கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு ஹமாஸ் அமைப்பு விருப்பம் தெரிவித்து இருந்தது. ஆனால், அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

இந்நிலையில், காசா முனையில் உணவுப் பொருட்கள் வழங்கும் மையத்திற்கு இன்று பொதுமக்கள் சென்றபோது அவர்கள் மீது இஸ்ரேல் படைகளும், அவர்களின் உள்ளூர் கூட்டாளிகளும் துப்பாக்கி சூடு நடத்தியதாக பாலஸ்தீனர்கள் கூறி உள்ளனர். இந்த தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது.

துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் இஸ்ரேல் ராணுவத்தின் கூட்டாளிகள் போன்று தோன்றியதாகவும், பொதுமக்கள் அவர்கள் மீது கற்களை வீசி தாக்கியபின் பின்வாங்கி சென்று ரபாவில் உள்ள ஒரு இஸ்ரேலிய ராணுவ மண்டலத்திற்குள் சென்றதாகவும் ஒருவர் கூறியிருக்கிறார். ஆனால் இதுபற்றி இஸ்ரேல் ராணுவம் தரப்பில் எந்த செய்தியும் வெளியிடப்படவில்லை.

ஹமாஸ் அமைப்பை எதிர்க்கும் உள்ளூர் ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவு அளிப்பதாக இஸ்ரேல் சமீபத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article