*யானைகள் அட்டகாசத்தை தடுக்க கோரிக்கை
களக்காடு : களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள சிதம்பரபுரத்தில் கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் காணப்பட்டு வருகிறது. பகல் நேரங்களில் மலையடிவார புதர்களில் தஞ்சமடையும் காட்டு யானைகள் இரவு நேரங்களில் விளைநிலங்களில் இருந்து வாழை, தென்னை பனை மற்றும் விவசாய பயிர்களை துவம்சம் செய்து வருகின்றன.
இந்த யானை கூட்டத்தில் 2 குட்டி உள்பட 11 யானைகள் வரை இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதுவரை யானைகள் அட்டகாசத்தால் ஆயிரக்கணக்கான வாழைகள், நூற்றுக்கணக்கான தென்னை, பனை மரங்கள் நாசமாகி உள்ளது.
இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. மேலும் யானைகள் அட்டகாசத்தால் விவசாயிகள் கடும் பீதியடைந்துள்ளனர். பகல் நேரங்களில் கூட விளைநிலங்களுக்கு செல்ல அச்சமாக இருப்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்க வேண்டும், யானைகள் நாசம் செய்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மூங்கிலடி மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் நேற்று களக்காடு வனத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதைதொடர்ந்து வனத்துறை துணை இயக்குனர் ரமேஷ்வரன், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது யானைகள் விளைநிலங்களுக்குள் புகுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
The post களக்காட்டில் பரபரப்பு வனத்துறை அலுவலகத்தை விவசாயிகள் திடீர் முற்றுகை appeared first on Dinakaran.