கல்லூரி முதல்வர் பதவி பறிக்கப்பட்டதால் பார்சல் வெடிகுண்டு அனுப்பி பாட்டி, பேரனை கொன்ற மாஜி முதல்வருக்கு ஆயுள் தண்டனை: ஒடிசா நீதிமன்றம் அதிரடி

1 day ago 5

புவனேஸ்வர்: ஒடிசாவில் கல்லூரியின் முதல்வர் பதவி பறிக்கப்பட்டதால், பார்ச்ல் வெடிகுண்டு அனுப்பிவைத்து இருவரை கொன்ற முன்னாள் முதல்வருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஒடிசா மாநிலம் பொலந்கிர் மாவட்டத்தை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சவும்யா சேகர் சாஹு என்பவருக்கும், அவரது மனைவி ரீமா என்பவருக்கும் கடந்த 2018 பிப்ரவரியில் திருமணம் நடந்தது. அதன்பின் பிப். 23ம் தேதி சாஹுவின் குடும்பத்திற்கு பரிசுப் பொருள் அடங்கிய பார்சல் ஒன்று வந்தது. சாஹு அந்தப் பார்சலை திறந்தபோது, அதில் இருந்த குண்டு வெடித்ததால், சவும்யா சேகர் சாஹு மற்றும் அவரது பெரிய பாட்டி ஜெமாமணி சாஹு ஆகியோர் உடல் சிதறி பலியாகினர். மேலும் அவரது மனைவி ரீமா கடுமையான காயங்களுக்கு உள்ளானார். குண்டுவெடிப்பு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்ததால், பாதிக்கப்பட்டவரின் வீட்டு சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டன.

மேலும் சாஹுவின் பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த வழக்கு முதலில் உள்ளூர் காவல்துறையால் கையாளப்பட்டது. ஆனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து, இந்த வழக்கு குற்றப்புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டது. அப்போதைய குற்றப்புலனாய்வுத் துறை ஆய்வாளர் அருண் போத்ரா தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையில், சாஹு குடும்பத்திற்கு அனுப்பப்பட்ட வெடிகுண்டு பார்சல், சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரிலிருந்து அனுப்பப்பட்டது என்பது உறுதியானது. மேலும் இவ்வழக்கில் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரியில், ஒடிசா மாநிலம் பொலந்கிர் மாவட்டத்தின் பட்நாகர் பகுதியில் ஜோதி விகாஸ் ஜூனியர் கல்லூரியின் முன்னாள் முதல்வரான புஞ்ஜிலால் மெஹர் (56) என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், தொழில்முறை பொறாமையால் இந்த வெடிகுண்டு தாக்குதலை நிகழ்த்தியதாக புஞ்ஜிலால் மெஹர் வாக்குமூலம் அளித்தார்.

அவரை கல்லூரி முதல்வர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அந்தப் பதவிக்கு சாஹுவின் தாயை நியமித்ததால் அவர் கோபமடைந்தார். ஒடிசாவில் இருந்து ராய்ப்பூருக்கு சென்றார். அங்கிருந்து வெடிகுண்டு பார்சலை தயாரித்து சவும்யா சேகர் சாஹுவின் வீட்டிற்கு அனுப்பிவைத்துவிட்டு, அதே நாளில் ஒடிசாவிற்கு திரும்பியதாக வாக்குமூலம் அளித்தார். இவ்வழக்கை விசாரித்த பொலந்கிர் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட புஞ்ஜிலால் மெஹருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்தியாவின் முதல் பார்சல் வெடிகுண்டு அனுப்பி வைத்து இருவரை கொன்ற வழக்கில் முன்னாள் கல்லூரி முதல்வருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் ரூ. 50,000 பெற்றுத் தந்த குற்றப்புலனாய்வுத் துறை ஆய்வாளர் அருண் போத்ரா தலைமையிலான குழுவினரை நீதிமன்றம் பாராட்டி உள்ளது.

The post கல்லூரி முதல்வர் பதவி பறிக்கப்பட்டதால் பார்சல் வெடிகுண்டு அனுப்பி பாட்டி, பேரனை கொன்ற மாஜி முதல்வருக்கு ஆயுள் தண்டனை: ஒடிசா நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Read Entire Article