கர்நாடகத்தில் தொடர் கனமழை: போர்க்கால அடிப்படையில் நிவாரண பணி - சித்தராமையா உத்தரவு

1 day ago 2

பெங்களூரு,

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, மலைநாடு மாவட்டங்களான சிவமொக்கா, குடகு, சிக்கமகளூரு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கடந்த 24-ந்தேதி முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாவட்டங்களில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

பல இடங்களில் நிலச்சரிவு, மரங்கள் சாய்ந்து விழுந்தது உள்ளிட்ட பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் வீடு இடிந்து விழுந்து, மரம் சாய்ந்து விழுந்து இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் 5-வது நாளாக நேற்றும் மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக தட்சிண கன்னடா மாவட்டத்தில் மங்களூரு, சுள்ளியா, புத்தூர் ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல்குனி, நேத்ராவதி, குமாரதாரா ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆறுகளின் கரையோரத்தில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

வீடுகளிலும் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்குள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்ததுடன், மின்கம்பங்களும், மரங்களும் சாய்ந்து விழுந்துள்ளன.

உடுப்பி, உத்தரகன்னடாவிலும் பல இடங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மல்பே பகுதியில் மீனவர்கள் சிலர் தடையை மீறி 3 படகுகளில் அரபிக்கடலில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் ராட்சத அலையில் சிக்கிக் கொண்டனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகியது. உத்தரகன்னடாவில் சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.

குடகு மாவட்டத்திலும் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காவிரி நதியின் பிறப்பிடமான தலைக்காவிரியில் கனமழை கொட்டி தீர்க்கிறது. இதனால் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தோனிகல்லு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளம் சூழ்ந்த தோனிகல்லு கிராமத்தில் 80 குடும்பங்கள் பரிதவித்தது. இதனால் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அவர்களை மீட்டு நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் மடிகேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். ஹாசனில் நேற்று மழையின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இருப்பினும் சில இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்து பாதிப்பை ஏற்படுத்தியது.

கனமழையால் ஹாவேரியில் நேற்றும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். பேடகி தாலுகா சிடேனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி பாபுலால் என்பவர் தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது மின்வயர் அறுந்து விழுந்தது. இதனால் அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

இதேபோல், ஹனகல் தாலுகா குடலா கிராமத்தை சேர்ந்த சஷாங்க் முத்தினகவுடா என்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தான். சிக்பள்ளாப்பூரில் கங்கலாபுரா கிராமத்தில் ரங்கப்பா என்பவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதனால் கர்நாடகத்தில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே மழை பாதிப்புகள் குறித்து முதல்-மந்திரி சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

"கர்நாடகத்தில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்து நிவாரண பணிகளை முடுக்கிவிட வேண்டும் என்று மாவட்ட பொறுப்பு மந்திரிகள், செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர்கள் போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும். கர்நாடகத்தில் 170 தாலுகாக்களில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்படும் பகுதிகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க 30, 31-ந் தேதி ஆகிய 2 நாட்கள் மாவட்ட கலெக்டர்கள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளேன். வெள்ளம் ஏற்பட்டால் மக்களை தங்க வைக்க ஏதுவாக 2 ஆயிரத்து 296 நிவாரண முகாம்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர்களின் வங்கி கணக்குகளில் போதுமான அளவுக்கு நிதி உள்ளது."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article