கர்நாடக காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவக்குமார் நீடிப்பார்-கட்சி மேலிடம் முடிவு

2 days ago 3

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் ஆகிறது. துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் பணியாற்றி வருகிறார். மேலும் அவர் காங்கிரஸ் மாநில தலைவராக கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். காங்கிரஸ் கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே என்ற கொள்கை பின்பற்றப்படுகிறது. அதன்படி கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருந்து டி.கே.சிவக்குமாரை விடுவிக்க வேண்டும் என்று மந்திரிகள் சதீஸ் ஜார்கிகோளி, கே.என்.ராஜண்ணா உள்ளிட்டோர் கட்சி மேலிடத்திடம் வலியுறுத்தினர்.

ஆனால் இதற்கு காங்கிரஸ் மேலிடம் செவி சாய்க்கவில்லை. வருகிற டிசம்பா் மாதம் வரை கட்சியின் மாநில தலைவராக டி.கே.சிவக்குமாரே நீடிப்பார் என்று மேலிட தலைவர்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சி மேலிடம் டி.கே.சிவக்குமாரை மாற்ற விரும்பவில்லை என்று முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார். முதல்-மந்திரி பதவி சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் ஆகியோருக்கு ஆளுக்கு 2½ ஆண்டுகள் என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி சித்தராமையாவின் பதவி காலம் வருகிற நவம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. அதனால் ஆட்சி தலைமையில் மாற்றம் நிகழ்வது குறித்து ஏற்கனவே காங்கிரசில் தலைவர்கள், மந்திரிகள் கருத்து கூறுவது தொடர்ந்து வருகிறது. சித்தராமையா ஆதரவாளர்கள், அவரே முதல்-மந்திரி பதவியில் நீடிப்பார் என்றும், டி.கே.சிவக்குமார் ஆதரவாளர்கள் முதல்-மந்திரி பதவியில் டி.கே.சிவக்குமார் அமருவார் என்றும் பேசி வருகிறாா்கள். ஆனால் அந்த ஒப்பந்தம் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் காங்கிரஸ் மேலிடம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article