கர்நாடக கருவூலத்தில் இருக்கும் ஜெயலலிதாவின் நகைகள் தமிழக அரசிடம் இன்று ஒப்படைப்பு

4 months ago 9

பெங்களூரு: தமிழ்நாடு முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் நகைகள், அசையா சொத்துகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் அண்ணன் மகன் தீபக் மனு தாக்கல் செய்த நிலையில், அந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தீபா மற்றும் தீபக் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

ஜெயலலிதாவின் நகைகள், சொத்துகள் ஆகியவை தமிழ்நாடு அரசுக்கே சொந்தமானவை என்ற சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்து கர்நாடக உயர்நீதிமன்றமும் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவின்படி, இன்று மற்றும் நாளை ஆகிய இரு நாட்களும் ஜெயலலிதாவின் நகைகள், அசையா சொத்துகளின் ஆவணங்கள் உட்பட 465 பொருட்களை உயர்நீதிமன்ற நீதிபதி முன்பாக அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

நீதிபதியின் பார்வையில் தங்க, வைர நகைகள் நகை மதிப்பீட்டாளர் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு, அவை முழுக்க வீடியோ மற்றும் புகைப்படங்களாக பதிவு செய்யப்பட்டு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி மற்றும் தமிழ்நாடு அரசின் இணை செயலாளர் பதவிக்கு நிகரான அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும். இதற்கிடையே, உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தீபா மற்றும் தீபக் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று பட்டியலிடப்பட்டுள்ளது. அந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பதற்கான வாய்ப்பில்லை என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

The post கர்நாடக கருவூலத்தில் இருக்கும் ஜெயலலிதாவின் நகைகள் தமிழக அரசிடம் இன்று ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article