கரும்புகை, துர்நாற்றம், மின்செலவை தடுக்கும் வகையில் மயானங்களில் ₹10 கோடியில் எரிவாயு தகன மேடை பணி: மாநகராட்சி திட்டம்

4 months ago 12

சோழிங்கநல்லூர், ஜன.19: சென்னையில் உள்ள மயானங்களில் சடலங்களை எரிக்கும் போது ஏற்படும் கரும்புகை, துர்நாற்றம், மின்செலவை தடுக்கும் வகையில் ₹10 கோடியில் எல்பிஜி தகன மேடை அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் மொத்தம் 192 மயானங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 88 மயானங்கள் 25 ஆண்டுகளுக்கு முன்பு, அப்போது இருந்த நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டன. அப்போதைய காலத்தில் இருந்த மின்சாரத்தால் இயக்கப்படும் தகன மேடைகள், மரக்கட்டைகளை எரிக்கும்போது உருவாகும் எரிவாயுவை கொண்டு இயக்கப்படும் தகன மேடைகள் என நவீனமாக உருவாக்கப்பட்டன.

பிற்காலத்தில் இந்த தகன மேடைகளால் அதிக மின்செலவு, துர்நாற்றம் மற்றும் புகை வெளியேறுவதால் ஏற்படும் காற்று மாசு போன்ற பிரச்னைகள் நிலவி வந்தன. பெரும்பாலான மயானங்கள் கரும்புகை படிந்து, பீதியை ஏற்படுத்தும் தோற்றத்தில் இருந்தன. இந்நிலையில் இந்த பிரச்னைகளுக்கு தீர்வுகாண அனைத்து மயானங்களிலும் எல்பிஜி எரிவாயுவை கொண்டு தகன மேடைகளை இயக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. நவீன மின் தகன மேடைகளை இயக்க உயரழுத்த மின்சாரம் தேவை. சடலங்கள் வந்தாலும், வராவிட்டாலும், காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தகன மேடையை குறிப்பிட்ட வெப்ப நிலையில் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும். 2 மணி நேரம் முன்னதாகவே தயார்படுத்த தொடங்க வேண்டும். இதனால் மாதத்துக்கு ₹1 லட்சத்துக்கு மேல் மின்சார செலவு ஏற்படுகிறது.

இந்த முறையில் சடலத்தை எரிக்க 2 மணி நேரம் தேவைப்படுகிறது. சாம்பலும் அதிகமாக உருவாகிறது. இவற்றை பராமரிக்க அதிக செலவாகிறது. மழை, புயல் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் இவற்றை இயக்க முடியாது. ஜெனரேட்டர்களாலும் இயக்க முடியாது. மரக்கட்டைகளை கொண்டு இயங்கும் தகன மேடைகளில் அதிக சாம்பல் உருவாகிறது. அவற்றை அப்புறப்படுத்துவதே சவாலாக உள்ளது. இதில் அதிக அளவு புகை வெளியேறி காற்று மாசுவை ஏற்படுத்துகிறது. மழை காலங்களில் உலர்ந்த விறகுகள் கிடைப்பதில் சிரமம் உள்ளது. ஒரு உடலை எரிக்க 1.30 மணி நேரம் பிடிக்கிறது.மேலும், மயானங்களை சுற்றி குடியிருப்புகளும் உள்ளது. இதனால் தகன மேடைகளில் சடலங்கள் எரிக்கப்படும் போது வெளியேறும் கரும்புகையால் சுற்றியுள்ள குடியிருப்புவாசிகளுக்கு அவ்வப்போது ஒவ்வாமை, சுவாச கோளாறு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமக்களின் வசதிக்கேற்ப இறுதி சடங்குகளை எவ்விதமான சிரமம் இன்றி அமைதி மற்றும் ஆரோக்கியமான சூழலில் செய்வதற்காக எரிவாயு தகனங்களில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. எனவே எரிவாயு தகன மேடைகள் எல்பிஜி மூலம் இயக்கப்படவுள்ளது. இதன் மூலம் சடலங்களை எரியூட்டும் போது, ஒரு சடலத்தை 45 நிமிடங்களில் எரித்துவிடலாம். 1 கிலோ அளவில் தான் சாம்பல் உருவாகும். தேவைப்படும்போது தகன மேடையை இயக்கினால் போதும். புகையும் வெளியேறாது. அதே போல், ஏற்கெனவே உள்ள கட்டமைப்பை எளிதாக எல்பிஜி எரிவாயுக்கு ஏற்றவகையில் மாற்றிக்கொள்ள முடியும். பராமரிப்பும் எளிது. ஒரு உடலை எரிக்க ஒரு வணிக சிலிண்டர் ₹1,600 தேவைப்படும்.

மாநகராட்சி சார்பில் சடலங்களை எரிக்கும் சேவை இலவசமாக வழங்கப்படுவதால், பெருநிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ், எரிவாயு சிலிண்டர்களை இலவசமாக பெற எண்ணெய் நிறுவனங்களை அணுக முடியும். இதன்மூலம் மாநகராட்சிக்கு பெருமளவில் செலவு மிச்சமாகும். மேலும் எல்பிஜி மூலம் சடலங்கள் எரியூட்டும் போது, அதன் மூலம் வெளியேறும் காற்றினால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஏற்கனவே சென்னை மாநகராட்சி சார்பில் சுமார் 80க்கும் மேற்பட்ட மயானங்ளை எல்பிஜி மயானங்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது மீதம் உள்ள மயானங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது கூடுதலாக 4, 5, 9, 10, 11, 13 ஆகிய மண்டலங்களில் தற்போது இந்த மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக ₹10,45,12,900 ஒதுக்கப்படவுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இவ்வாறு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post கரும்புகை, துர்நாற்றம், மின்செலவை தடுக்கும் வகையில் மயானங்களில் ₹10 கோடியில் எரிவாயு தகன மேடை பணி: மாநகராட்சி திட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article