
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 20ம் தேதி தொடங்குகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோகித் ஓய்வு பெற்றுள்ளதால் இந்த தொடருக்கான இந்திய அணி சுப்மன் கில் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணியில் கருண் நாயர் 8 ஆண்டுக்கு பிறகு இடம் பிடித்துள்ளார். உள்ளூர் போட்டிகளில் தொடர்ச்சியாக ரன் குவித்ததன் காரணமாக அவருக்கு தேசிய அணியின் கதவு திறந்துள்ளது. குறிப்பாக 2024-25-ம் ஆண்டு ரஞ்சி கிரிக்கெட்டில் விதர்பா அணிக்காக 9 ஆட்டங்களில் ஆடி 4 சதம் உள்பட 863 ரன்கள் எடுத்தார். விஜய் ஹசாரே ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் 5 சதங்கள் விளாசி கவனத்தை ஈர்த்தார்.
இந்நிலையில், கருண் நாயர் குறித்து அவரது நண்பரான கே.எல். ராகுல் சில கருத்துகளை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, கருண் நாயரை எனக்கு நீண்ட காலம் தெரியும். அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியிருப்பது அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் சிறப்பு வாய்ந்தது. அவரது அனுபவமும், இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் இருந்து கற்றுக்கொண்டதும் டெஸ்ட் போட்டிக்கு உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.