சென்னை: கருணை அடிப்படையில் வேலை வழங்குவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பாக, 2023 செப்டம்பர் முதல் இதுவரை தலைமை செயலாளர்களாக பதவி வகித்தவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்யும்படி, நீதித்துறை பதிவாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணியின் போது உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக கால நிர்ணயம் செய்வது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும், கருணை அடிப்படையில் வேலை கோருவோரின் மாநில அளவிலான பட்டியலை தயாரிக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளதா என மூன்று மாதங்களில் அறிக்கை அளிக்கவும் கடந்த 2023 செப்டம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், கருணை அடிப்படையில் வேலை வழங்கக் கோரிய வழக்கு, நீதிபதி பட்டு தேவானந்த் முன் விசாரணைக்கு வந்த போது, 2023ம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி 2023ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் எந்த குழுவும் அமைக்கப்படவில்லை, அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறி, தலைமைச் செயலாளரின் செயலுக்கு அதிருப்தி தெரிவித்தார்.
மாநில நிர்வாகத்தின் தலைமை பதவியை வகிக்கும் தலைமைச் செயலாளரே, நீதிமன்ற உத்தரவுகளை சாதாரணமாக எடுத்துக் கொண்டு, அதை அமல்படுத்தவில்லை என்றால், அவருக்கு கீழ் பணியாற்றும் பிற அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துவார்கள் என எதிர்பார்க்க முடியாது. அதிகாரிகளின் மெத்தனப் போக்குக்கு இந்த வழக்கு மிகச்சிறந்த உதாரணம். நீதி வேண்டி நீதிமன்றத்தை நாடும் பொதுமக்களைப் பற்றி அவர்கள் கவலை கொள்ளவில்லை. 2023 செப்டம்பர் மாதத்துக்குப் பின், இதுவரை தமிழகத்தில் தலைமைச் செயலாளர்களாக பதவி வகித்தவர்களின் விவரங்களைப் பெற்று, அவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்து, இது சம்பந்தமாக ஜூன் 20ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப, நீதித்துறை பதிவாளருக்கு நீதிபதி பட்டு தேவானந்த் உத்தரவிட்டுள்ளார்.
The post கருணை அடிப்படையில் பணி வழங்காத விவகாரம் தலைமை செயலாளர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நீதித்துறை பதிவாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.