வண்டலூர்: கல்லூரி மாணவி கருக்கலைப்பு செய்து உயிரிழந்த விவகாரம் பட்டியல் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று செங்கல்பட்டு எஸ்.பி.க்கு ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை வண்டலூரை அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி பல்கலைக்கழகத்தில் 2ம் ஆண்டு படித்து வந்த மாணவியை, அதே பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த நாமக்கல்லை சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவர் ஆசைவார்த்தை கூறி கர்ப்பிணியாக்கியதாக கூறப்படுகிறது.
அந்த மாணவிக்கு படூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்த நிலையில் உடல்நிலை மோசமாகி உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ் மாநிலக்குழு தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் ஆகியோர் சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆதிதிராவிடர் ஆணையத்தில் புகார் அளித்தனர்.
அதில், பட்டியலினத்தை சேர்ந்த மாணவியை உதவி பேராசிரியர் ராஜேஷ்குமார் மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், கருக்கலைப்பு காரணமாக அந்த மாணவி உயிரிழந்த நிலையில் ராஜேஷ்குமார் மீது பட்டியல் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவில்லை என கூறியிருந்தர். இந்த புகாரை ஆணையத்தின் தலைவர் நீதிபதி தமிழ்வாணன், துணை தலைவர் இமயம், உறுப்பினர் ஆனந்தராஜா ஆகியோர் விசாரித்தனர்.
முடிவில் இந்த விவகாரம் தொடர்பாக செங்கல்பட்டு போலீஸ் சூப்பிரண்டு உரிய விசாரணை மேற்கொண்டு பட்டியல் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறு பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்த விவரத்தை செங்கல்பட்டு கலெக்டர் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
The post கரு கலைப்பு செய்து கல்லூரி மாணவி உயிரிழப்பு பட்டியல், பழங்குடியினர் மீதான வன்கொடுமை சட்டத்தில் வழக்கு: செங்கை எஸ்.பி.,க்கு ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.