சென்னை: வெற்றிகரமான ஒரு தமிழ்நாட்டை மீண்டும் உருவாக்குவதே `மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்` எனற இந்தச் சுற்றுப் பயணத்தின் லட்சியம். இது ஒட்டுமொத்த தமிழ்நாடும் மாற்றத்தை நோக்கி நடக்கும் வெற்றிப் பயணம். ‘ஸ்டாலின் அரசை வீழ்த்தும் பயணம்’ இந்தப் பயணத்தில் முன்னணிக் களவீரனாக நான் இருப்பேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தேர்தல் சுற்றுப்பயணத்துக்கான அறிவிப்பை இன்று காலை வெளியிட்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி. அப்போது சுற்றுப் பயணத்துக்கான லோகோ மற்றும் பாடலையும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், தமிழக மக்களுக்கு அதிமுக தேர்தல் சுற்றுப்பயணம் குறித்து விவரித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: என்னுள் கலந்திருக்கும் எனதருமைத் தமிழக மக்களே, உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் ஓர் இனிய செய்தியை சொல்லவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இதை எழுதும்போதே எனது உள்ளம் மகிழ்ச்சியாலும் உவகையாலும் நிறைகிறது. என்னைப் பற்றி எல்லாமும் உங்களுக்குத் தெரியும். என்னிடம் எந்த ரகசியமும் இல்லை.