கன்னடம் பற்றிய பேச்சு; கமல்ஹாசன் தவறாக பேசவில்லை: நடிகை திவ்யா பரபரப்பு கருத்து

1 day ago 2

சென்னை: கடந்த 24ம் தேதி, சென்னையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என்று கூறினார். அவர் இந்த விஷயத்தை பேசி சில நாட்களுக்குப் பின்னர் கன்னட அமைப்பினர் கர்நாடகாவில் தக் லைஃப் படத்தின் போஸ்டர்களை கிழித்தார்கள். இப்படி இருக்கும்போது, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் கமல்ஹாசனுக்கு எதிராக கருத்து தெரிவித்தார். பலரும் கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறினார்கள். கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கன்னட அமைப்பினர் பலரும் கருத்து தெரிவிக்க, கமல்ஹாசனோ தனது பாணியில், நான் அன்றைக்கு பேசியது அன்பினால் பேசியது. அன்பு என்றைக்குமே மன்னிப்பு கேட்காது என்று கூறி, தனது படத்தின் புரோமோஷன் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

கமல்ஹாசனின் இந்த பதிலுக்கு பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்தனர். கர்நாடக திரைப்பட சம்மேளன தலைவர் நரசிம்மலு கமல்ஹாசனின் இந்த விளக்கத்திற்குப் பின்னர், கமல்ஹாசன் என்ன விளக்கம் சொன்னாலும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அவர் மன்னிப்பு கேட்டால் மட்டுமே கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ படம் வெளியாகும் இல்லை என்றால் படம் வெளியாகாது என்று தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு கர்நாடகத்தை சேர்ந்த நடிகையும் காங்கிரஸ் முன்னாள் எம்.பியுமான ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது அவரது எக்ஸ் பக்கத்தில் மொழிக் குடும்பம் வரலாறு தொடர்பாக ஒரு வரைபடத்தை பகிர்ந்துள்ளார். மேலும்., ‘‘கமல்ஹாசன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்தும் திராவிட மொழிகள் என்று குறிப்பிட்டு தான் அப்படி பேசியுள்ளார் என்று நினைக்கிறேன்.

நமது மொழிகள் ஒரே வரலாற்றுப் பின்னணியை கொண்டுள்ளது. அவர் பேசியதை மன்னிக்கலாம் என்று பதிவிட்டுள்ளார். அவரது பதிவுக்கு ஒருவர் கமல்ஹாசன் சொன்ன, அன்பு மன்னிப்பு கேட்காது என்று பதிவிட்டார். இதற்கு பதில் அளித்த திவ்யா ஸ்பந்தனா, ‘‘இதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அன்பில் ஈ.கோ என்ற ஒன்று இருக்கவே இருக்காது ஒருவர் எளிதாக மன்னிப்பு கேட்க முடியும்” என்று பதிவிட்டுள்ளார். இவரது பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

The post கன்னடம் பற்றிய பேச்சு; கமல்ஹாசன் தவறாக பேசவில்லை: நடிகை திவ்யா பரபரப்பு கருத்து appeared first on Dinakaran.

Read Entire Article