கந்தல் சேகரிப்பாளர்களுக்கான புதுவாழ்வு சிறப்பு முகாம் - மேயர் பிரியா தொடங்கி வைத்தார்

2 hours ago 2

பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் கந்தல் சேகரிப்பாளர்களுக்கான புதுவாழ்வு சிறப்பு முகாமினை மேயர் பிரியா தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் கந்தல் சேகரிப்பாளர்களுக்கான புதுவாழ்வு சிறப்பு முகாமினை மேயர் பிரியா இன்று (21.06.2025) தொடங்கி வைத்து, அரசுத் துறைகளால் மேற்கொள்ளப்படும் சிறப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்டார். பின்னர், மேயர் பிரியா பயனாளிகளுக்கு மருத்துவக் காப்பீடு அட்டை, தாட்கோ அடையாள அட்டைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரியத்தின் சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளைப் பெறும் வகையில் இவ்வாரியத்தினுடைய அடையாள அட்டை வழங்கும் பணிகள் சென்னை மாநகராட்சியால் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் குப்பை கொட்டும் வளாகங்களில் கந்தல் சேகரிப்பாளர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் கிடைத்திடும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக, கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் கந்தல் சேகரிப்பாளர்களுக்காக கடந்த 26.04.2024 அன்று சிறப்பு முகாம் நடத்தப்பட்டு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இன்று பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் கந்தல் சேகரிப்பாளர்களுக்கான புதுவாழ்வு சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. இதனை மேயர் பிரியா தொடங்கி வைத்து அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கான சிறப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து 200 கந்தல் சேகரிப்பாளர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

மண்டலம்-9 முதல் மண்டலம்-15 வரை நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் சேகரிக்கப்படுகிறது. இந்தக் குப்பைகளை அகற்றும் பணியில் கந்தல் சேகரிப்பாளர்கள் ஈடுபடுகின்றனர்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பெருங்குடியில் அமைந்துள்ள குப்பை கிடங்கில் குப்பைகளை சேகரிக்கும் கந்தல் சேகரிப்பாளர்கள் கணக்கெடுக்கப்பட்டதில், சுமார் 162 குடும்பங்கள் மற்றும் 284 தனிநபர்கள் உள்ளனர். இவர்களுக்கு தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் சென்றடையும் பொருட்டும், புதிய வாழ்வாதாரத்திற்கான கூட்டு முயற்சியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், சோழிங்கநல்லூர், வட்டாட்சியர் அலுவலக வருவாய்த்துறை, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, பெருநகர சென்னை மாநகராட்சியின் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பதிவு, சமூக நலத்துறை DSWO வடக்கு மற்றும் தெற்கு, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சார்பில் இ- சேவை மையம், தொழிலாளர் நல வாரியம், ஆதார் ஆட்டை ஆகிய சம்பந்தப்பட்ட துறைகளின் சேவைகளை வழங்கிடும் வகையில், கந்தல் சேகரிப்பாளர்களுக்கான முதற்கட்ட சிறப்பு முகாமானது 19.05.2025 அன்று நடத்தப்பட்டு, 139 நபர்கள் பயனடைந்தனர். இவர்களுக்கு தூய்மைப் பணியாளர்களுக்கான காப்பீடு அட்டை பெற பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரண்டாவது கட்டமாக இந்தச் சிறப்பு முகாமானது, 19.06.2025 அன்று நடத்தப்பட்டு, 165 நபர்கள் பயனடைந்துள்ளனர். இதில் முதல்-அமைச்சர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்திற்கு 111 நபர்களும், இதரத் துறைகளின் சேவைகளுக்காக 54 நபர்களும் பதிவு செய்துள்ளனர்.

மேலும், இன்று (21.06.2025) நடத்தப்பட்ட கந்தல் சேகரிப்பாளர்களுக்கான புதுவாழ்வு சிறப்பு முகாமில் அனைத்து கந்தல் சேகரிப்பாளர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை மற்றும் சிறப்பு மருத்துவ முகாம், தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் ரூ.5 லட்சம் மதிப்புள்ள அனைத்து பாதுகாப்பு உபகரணங்கள், மேற்குறிப்பிட்டுள்ள துறைகளிடமிருந்து அடையாள அட்டை, பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள், மண்டலம் 11 மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் சில வீட்டு உபயோகப் பொருட்கள், மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டைகள் மற்றும் தாட்கா அடையாள அட்டைகள் ஆகியவை மேயர் பிரியாவால் இன்று வழங்கப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article