கும்மிடிப்பூண்டி: கத்தார் நாட்டில் நடந்த சர்வதேச சிலம்பப் போட்டியில் 29 தங்கப் பதக்கங்கள் வென்று அசத்திய மாணவ, மாணவிகளுக்கு கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி கிராமத்தில் ஜெ.ஜெ.ஜெ.அக்னி சிலம்பம் பயிற்சியாளர் ஜானகி ஜோதிலிங்கம் பயிற்சி கூடத்தில் ஆத்துப்பாக்கம், பழைய கும்மிடிப்பூண்டி, பெத்திகுப்பம், வழுதலம்பேடு, தேர்வழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் சிலம்பம் பயிற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில், கடந்த 25ம் தேதி கத்தார் நாட்டில் உலகளவிலான சிலப்பம் போட்டி நடந்தது.
இந்த சிலம்பம் போட்டியில் இந்தியா, இத்தாலி, ஆஸ்திரேலிய, அமெரிக்க, கத்தார், உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வயதுக்கு ஏற்றார்போல் பல பிரிவுகளில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில், ஜெ.ஜெ.ஜெ. அக்னி சிலம்பப் பயிற்சி கூடத்தில் இருந்து 15 மாணவர்கள் பங்கேற்று பல்வேறு பிரிவுகளில் 29 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கல பதக்கங்களை வென்றனர். இதையடுத்து, கத்தார் நாட்டில் இருந்து நேற்று அவர்கள் சென்னை வந்தனர். அவர்களுக்கு கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு மேளதாளங்கள் முழங்க மாலை அணிவித்தும், மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.
The post கத்தாரில் சர்வதேச சிலம்ப போட்டி; கும்மிடிப்பூண்டி மாணவர்கள் 29 தங்கம் வென்று அசத்தல்: ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.