கதறவிடும் கத்திரி வெயில் சீசன் தொடங்கியது: உச்சிப்பொழுதில் வெளியில் செல்ல வேண்டாம்; மருத்துவர்கள் ஆலோசனை

1 month ago 7

* போதிய அளவு நீர் பருகுங்கள்

தேனி: தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வெயில் உச்சத்தில் உள்ளது. ஆண்டுதோறும் மே மாதத்தில் வரும் அக்னி நட்சத்திர காலக்கட்டத்தில் வெப்பநிலை உச்சக்கட்டத்தில் இருக்கும். தற்போதைய நிலவரப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் பல இடங்களில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கடந்து பதிவாகி வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில், மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் அதிகளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக மக்கள் பகல் நேரங்களில் குறிப்பாக காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை வெளியே வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள், கருவுற்ற பெண்கள், முதியவர்கள் வெயிலினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உள்ளாவார்கள் என்பதால் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு கோடைக்காலம் தொடங்கும் முன்பே சுமார் 3 மாதங்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. கோடை வெயில் காலங்களில் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் மட்டுமே வெயிலால் சுருண்டு விழுந்து இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு தமிழகத்திலும் வெயிலை சமாளிக்க முடியாமல் சிலர் இறந்துள்ளனர். இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கியது. இந்த வெயில் 28ம் தேதி வரை நீடிக்கிறது. ஏற்கனவே அக்னி நட்சத்திரத்தை நினைவூட்டும் வகையிலேயே வெயிலின் தாக்கம் உள்ள நிலையில், இன்னும் வெயிலின் அளவு அதிகரிக்கலாம் என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை மாவட்ட நிர்வாகம் விளக்கியுள்ளது.

இது குறித்து மருத்துவர்கள் சார்பில் தெரிவித்துள்ளதாவது, ‘‘கோடை வெயிலினால் அதிக வியர்வை வெளியேறும் போது உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைசுற்றல், தசை பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேறுதல், மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இவற்றினால் பச்சிளம் குழந்தைகள், சிறு வயது குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் அதிக அளவில் பாதிப்படைய வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் கோடை வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள, உடலின் நீர் சத்து குறையாமல் பராமரிக்க அதிக அளவு நீர் பருக வேண்டும். தாகம் இல்லை என்றாலும் போதிய அளவு நீர் பருக வேண்டும். சிறுநீரானது வெளிர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும் அளவில் தேவையான அளவு நீர் பருக வேண்டும்.

சூடான பானங்கள் பருகுவதை தவிர்க்க வேண்டும். வெளியே செல்லும் போது, பயணத்தின் போது குடிநீர் பாட்டில் எடுத்துச்செல்ல வேண்டும். அதிக அளவில் மோர், உப்பு மற்றும் மோர் கலந்த அரிசி கஞ்சி, இளநீர், உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு, ஓ.ஆர்.எஸ், மற்றும் பழச்சாறுகள் குடிக்க வேண்டும். பருவ கால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவு உண்ண வேண்டும். முடிந்தவரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்கவேண்டும். மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணியலாம். வெளியில் செல்லும்போது காலணிகளை அணிய வேண்டும். மதிய நேரத்தில் வெளியே செல்லும்போது குடை கொண்டு செல்ல வேண்டும். வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான தளர்ந்த காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

திறந்த வெளியில் வேலை செய்யும் போது தலையில் பருத்தி துணி துண்டு அணிந்து வேலை செய்ய வேண்டும். வீடுகளில் குளிர்ந்த காற்றோட்டம், சூரிய ஒளி நேரடியாக படும் ஜன்னல் மற்றும் கதவுகள் ஆகியவற்றை திரைச்சீலைகளால் மூட வேண்டும். இரவு நேரங்களில் குளிர்ந்த காற்று வருமாறு ஜன்னல்களை திறந்து வைக்கலாம். அதே நேரம், தேவை இல்லாமல் வெயிலில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக மதியம் 12 மணி முதல் 3.30 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வெயில் காலங்களில் வெறுங்காலுடன் வெளியே செல்லாதீர்கள். சிறிய குழந்தைகள் மதிய வேளையில் வீட்டின் வெளியே விளையாடுவதை தவிர்க்க வேண்டும்.

கோடை வெயிலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அருகிலுள்ள அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் ஓஆர்எஸ் கரைசல் பெற்று, 1 லிட்டர் தண்ணீரை காய்ச்சி ஆற வைத்த குடிநீரில் 1 பாக்கெட் வீதம் கலந்து குடிக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில், அரசு மருத்துவமனைகளில் தேவையான மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்’’ என்றனர்.

நீர்நிலைகளுக்கு சுற்றுலா
தேனி அருகே வீரபாண்டி வழியாக முல்லையாறு செல்கிறது. இங்குள்ள தடுப்பணையானது பல்வேறு தமிழ் திரைப்படங்களில் இடம்பெற்ற பிரபலமானதாகும். தேனியில் இருந்து கம்பம், குமுளி, தேக்கடி, சபரிமலை செல்லும் பயணிகள் வீரபாண்டி முல்லையாற்றின் தடுப்பணையை ரசிக்காமல் செல்லமுடியாது. இதில் இச்சாலைவழியாக சொந்த வாகனங்களில் பயணிப்போர் முல்லையாற்று பாலம் அருகே வாகனங்களை நிறுத்தி விட்டு, தடுப்பணைக்கு வந்து குளித்து செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் தற்போது வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவிற்கான கம்பம் நடுதல் நடந்து முடிந்துள்ளதையடுத்து, கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. தொடர்ந்து முல்லைப்பெரியாற்றில் சீரான அளவில் தண்ணீர் செல்வதால் பயணிகள் மற்றும் பக்தர்கள் தடுப்பணையில் குளித்து மகிழ்ந்தனர்.

பழச்சாறு தான் பெஸ்ட்
கோடையில் வெயிலில் இருந்து காத்துக்கொள்ள கீழ்கண்ட உணவுப் பொருட்களை அனைவரும் கண்டிப்பாய் எடுத்துக் கொள்ள வேண்டும்.
*மோர்: மிக அளவான உப்பு சேர்த்து ஓரிரு கிளாஸ் மோர் அருந்துவது கோடையிலிருந்து உங்களை வெகுவாய் பாதுகாக்கும்.
*கரும்பு சாறு: கரும்புசாறில் இஞ்சி, எலுமிச்சை சாறு கலந்து தரப்படும் போது சிறுநீர் பாதையில் ஏற்படும் பாதிப்பினை வெகுவாய் தவிர்த்து விடுகின்றது.
*நுங்கு: இதனை ஐஸ் ஆப்பிள் என்பர் அந்த அளவு குளிர்ச்சியினை உடலுக்குத் தர வல்லது.
*எலுமிச்சை-புதினா சாறு: இது உடலில் கட்டிகள், வேர்குரு தோன்றுவதை தவிர்க்கும்.
*நன்னாரி: இதனை ‘சர்பத்’, என்ற முறையிலே எடுத்துக் கொண்டால் உடலை நீண்ட நேரம் ‘ஜில்’லென வைத்திருக்கும்.
*நெல்லிக்காய்: இதனை சிறிதளவு ஜூஸாகவே தினமும் எடுத்துக் கொள்ளுங்கள்.

The post கதறவிடும் கத்திரி வெயில் சீசன் தொடங்கியது: உச்சிப்பொழுதில் வெளியில் செல்ல வேண்டாம்; மருத்துவர்கள் ஆலோசனை appeared first on Dinakaran.

Read Entire Article