ஓசூர்: கணவன், மனைவி என கூறி ஒன்றாக வாழ்ந்த காதல் ஜோடி ஒரே தூக்கில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியை சேர்ந்தவர் தினேஷ் (23). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இதே போல், திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை சேர்ந்த பவானி (22), ஓசூரில் உள்ள மற்றொரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர்கள் இருவரும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தனர். இவர்கள் ஓசூர் முக்கண்டப்பள்ளி பகுதியில், தங்களை கணவன், மனைவி எனக்கூறி, வீடு வாடகை்கு எடுத்து தங்கியிருந்தனர். நேற்று முன்தினம் இரவு, அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், பவானி கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து, தினேஷ் பவானியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி விட்டு, இணைப்பை தினேஷ் துண்டித்து விட்டார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பவானி, மீண்டும் அவரை தொடர்பு கொள்ள முயன்றபோது முடியவில்லை. இதனால், உடனடியாக அவர் வீட்டுக்கு விரைந்து சென்றார். அங்கு தினேஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிந்தது.
அவரது உடலை பார்த்து பவானி கதறி அழுதார். பின்னர், காதலனை பிரிந்த துக்கம் தாளாமல், தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தார். அதன்படி, தனது நண்பர்களுக்கு போன் செய்து, நடந்த விபரங்களை அவர்களிடம் கூறினார். அதன் பிறகு, அவரும் அங்கேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடன் தொல்லை 2வது மனைவியுடன் முதியவர் தற்கொலை
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் பாஸ்கரன் (61). பொக்லைன் வாகனங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே மனைவி உள்ள நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த கவிதாமணியை (51), இரண்டாவதாக பதிவுத்திருமணம் செய்துள்ளார். பாஸ்கரன் உடல் நலக்குறைவு காரணமாக, மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதற்காக அப்பகுதியில் உள்ள விடுதியில் 2வது மனைவியுடன் தங்கி, தினமும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று காலை காபி கொடுப்பதற்காக தனியார் விடுதி ஊழியர் சென்று அறைக்கதவை தட்டியுள்ளார். அறைக்கதவு திறக்காததால் சந்தேகமடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பாஸ்கரன், கவிதாமணி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. அங்கிருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘தொழில்ரீதியாக அவருக்கு நிறைய கடன் இருந்துள்ளது. மதுரைக்கு வந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடன்காரர்கள் தினசரி கடனைக் கேட்டு நச்சரித்துள்ளனர். இதனால், விரக்தியடைந்த பாஸ்கரன், கவிதாமணியுடன் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்’ என்றனர்.
The post கணவன், மனைவி என கூறி ஒன்றாக வாழ்ந்தனர்; ஒரே தூக்கில் காதல் ஜோடி தற்கொலை: ஓசூரில் பரபரப்பு appeared first on Dinakaran.