சென்னை: ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் அடங்கிய கணக்கு அலுவலர், சட்ட அலுவலர் பதவிக்கு வரும் 19ம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபால சுந்தரராஜ் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) செயலாளர் கோபால சுந்தரராஜ் வெளியிட்ட அறிவிப்பு: ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள்) பணிகளில் அடங்கிய பல்வேறு கணக்கு அலுவலர் மற்றும் சட்ட அலுவலர் பதவிகளின் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு வரும் 19ம் தேதி சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டுள்ள தேர்வர்களின் தரவரிசைப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில்(www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கலந்தாய்விற்கான நாள், நேரம் மற்றும் இதர விவரங்கள் அடங்கிய அழைப்பாணையினை தேர்வர்கள் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.inலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கலந்தாய்விற்கு அழைக்கப்படும் தேர்வர்களுக்கு அதற்கான விவரம் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மற்றும் மின்னஞ்சல் (இமெயில்) வாயிலாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்விற்கு குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்துகொள்ளத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது. கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்ட அனைத்து தேர்வர்களும் தெரிவு செய்யப்படுவார்கள் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post கணக்கு அலுவலர், சட்ட அலுவலர் பதவிக்கு வரும் 19ம் தேதி கலந்தாய்வு: டிஎன்பிஎஸ்சி செயலாளர் அறிவிப்பு appeared first on Dinakaran.