
பிறப்பதற்கு முன்பே தந்தையையும், வளரும் வயதில் தாயையும் இழந்த ரங்கராஜ், கஷ்டப்பட்டு படித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகிறார். நேர்மையான அதிகாரியாக ஜொலிக்கிறார். அழகான மனைவி, அன்பான மகள் என மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும்போது, அவரது மனைவி நான்சி கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்.
மனைவியின் மரணத்துக்கு பிறகு குடிக்கு அடிமையாகி தன்னைத்தானே அழித்துக்கொண்டு வரும் ரங்கராஜுக்கு தனது மனைவியை கொலை செய்தது யார்? என்ற உண்மை தெரியவருகிறது. கொலையாளியை தேடி பாய்ச்சலுடன் செல்கிறார். ரங்கராஜின் மனைவியை கொலை செய்தது யார்? கொலைக்கு என்ன காரணம்? என்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதி கதை. முதல் படத்திலேயே தந்தை, மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ள ரங்கராஜ், படம் முழுக்க நிறைந்துள்ளார். சண்டை காட்சிகளில் வெளுத்து வாங்கியுள்ளார். சோக காட்சிகளில் அனுதாபம் அள்ளுகிறார். சுருதி நாராயணனின் அழுத்தமான நடிப்பும், நான்சியின் நளினமான நடிப்பும் கவனம் ஈர்க்கிறது.
சாய் தீனாவின் மிரட்டல் நடிப்பு வலு சேர்க்கிறது. டெல்லி கணேஷ், பிர்லா போஸ், ஸ்ரீலேகா, அறந்தாங்கி நிஷா என அனைவருமே தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்துள்ளனர்.
மனோஜின் ஒளிப்பதிவும், ஜோஸ் பிராங்கிளின் இசையும் படத்துடன் ஒன்ற செய்துள்ளது. பின்னணி இசையில் கவனம் தேவை. நடிகர்-நடிகைகளின் நேர்த்தியான நடிப்பு பலம். யூகிக்க முடியும் காட்சிகள் பலவீனம். திரைக்கதையில் மெனக்கெடல் இல்லை.
வழக்கமான பழிவாங்கல் கதை என்றாலும், சில திருப்பங்களுடன் கதைக்களத்தை நகர்த்தி சென்று கவனிக்க வைக்கிறார், ரங்கராஜ். நடிகராக காட்டிய அர்ப்பணிப்பை, இயக்குனராகவும் காட்டியிருந்தால் இன்னும் ஜொலித்திருப்பார்.
கட்ஸ் - கவனம்