
பர்மிங்காம்,
இங்கிலாந்துக்கு சென்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லீட்சில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 371 ரன்களை இலக்காக நிர்ணயித்த போதிலும் அதை இங்கிலாந்து அணி கடைசி நாளில் வெற்றிகரமாக விரட்டிப்பிடித்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது பர்மிங்காம் மைதானத்தில் இந்திய அணி பெற்ற முதல் டெஸ்ட் வெற்றி ஆகும். இதற்கு முன்னர் இங்கு விளையாடிய 8 டெஸ்டில் ஆடி 7-ல் தோல்வியும் ஒன்றில் டிராவும் கண்டிருந்தது.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் தோல்வி கண்ட பின்னர் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, கடினமான ஒன்று. தோல்வியை 2 தருணங்கள் கொடுத்தன. 200/5 என தடுமாறிய இந்தியாவை சுருட்ட முடியாமல் போனதும், 80/5 என நாங்கள் தடுமாறியதும் முக்கிய காரணங்களாக அமைந்தன.
அங்கிருந்து மீண்டு வருவது கடினமாக இருந்தது. 200/5 என இந்தியா தடுமாறிய போது நீங்கள் வலுவான நிலையில் இருந்தீர்கள். ஆனால் போட்டி ஆழமாக செல்லும் போது பிட்ச் நாங்கள் எதிர்பார்த்தது போல் விளையாடவில்லை. சொல்லப்போனால் அது இந்தியாவுக்கு அதிக பொருத்தமாக அமைந்தது. திட்டங்களை மாற்றி நாங்கள் அனைத்தையும் முயற்சித்தோம்.
ஆனால் அதற்குள் எதிரணி மேலே சென்று விட்டால் போட்டியை மல்யுத்தம் செய்தும் மீண்டும் கொண்டு வருவது கடினமாக இருந்தது. சுப்மன் பேட்டிங்கில் நம்ப முடியாத வகையில் விளையாடினார். நாளின் இறுதியில் நீங்கள் பேட்டிங் செய்வது கடினமானதாக இருக்கும். ஜேமி ஸ்மித் அணிக்குள் வந்தது முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். நாங்கள் விரும்பும் கீப்பருக்கு தகுந்தார் போல் அவர் அபாரமாக செயல்பட்டு வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.