கடலாடி அருகே ஊரணியில் செத்து மிதக்கும் மீன்கள்

1 day ago 4

ராமநாதபுரம்: கடலாடி அருகே ஊரணியில் திடீரென ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே கே.கருங்குளம், பூதங்குடி கிராமங்கள் உள்ளன. இந்த இரண்டு ஊர்களின் மையப்பகுதி சாலையோரம் பெரிய ஊரணி அமைந்துள்ளது. இந்த ஊரணி இப்பகுதி மக்கள் குளிப்பதற்கு, துணிகள் சலவை செய்வதற்கு, கால்நடைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஊரணியில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தண்ணீர் தேங்கி கிடைக்கிறது.

இந்நிலையில் ஊரணியில் நேற்று திடீரென ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. இதனால் துர்நாற்றம் வீசியது. ஊரணியின் கரையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சமுதாயக்கூடம், இ.சேவை மையம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இதனால் மாணவர்கள், பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக உள்ளது. இதன் வழியாக கடலாடி-மீனங்குடி செல்லும் சாலை உள்ளது.

இதனால் போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது. ஊரணியில் இருந்து துர்நாற்றம் வீசுவதால், சுகாதாரக்கேடு நிலவுகிறது. எனவே செத்து மிதக்கின்ற மீன்களை அப்புறப்படுத்த பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கடலாடி அருகே ஊரணியில் செத்து மிதக்கும் மீன்கள் appeared first on Dinakaran.

Read Entire Article