சென்னை : கடந்த ஜன.26ம் தேதி இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 19 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தை சேர்ந்த 34 மீனவர்களை இலங்கை அரசு கைது செய்து அந்நாட்டு சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 34 பேரும் இன்று இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் 19 மீனவர்கள் மட்டும் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார்.
அத்துடன் விடுதலை செய்யப்பட்ட 19 மீனவர்களில் 16 பேருக்கு தலா ரூ. 50,000 அபராதமும், படகு ஓட்டிய 3 மீனவர்களுக்கு தலா ரூ. 60.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.இந்த அபராதத் தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் 16 பேருக்கு 6 மாதமும் 3 பேருக்கு ஓராண்டும் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.மீதமுள்ள 15 மீனவர்களின் படகு எண் தவறாக இருப்பதால் அவர்களை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் மறுத்துள்ளது.
இந்த வழக்கின் அடுத்த விசாரணையை பிப்ரவரி 10ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்துள்ளார்.
இதனிடையே, விடுவிக்கப்பட்ட 19 மீனவர்களை தமிழகத்துக்கு அனுப்பும் பணியை இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து, விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஓரிரு தினங்களில் தமிழகம் திரும்புகின்றனர்.
The post கடந்த ஜன.26ம் தேதி இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட 19 ராமேஸ்வரம் மீனவர்கள் அபராதத்துடன் விடுதலை appeared first on Dinakaran.