
புதுடெல்லி,
இந்தியாவில் உள்நாட்டு சமையல் எண்ணெய் தேவையில் 50 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. சமீப காலமாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து கொண்டே இருப்பதால் பல பொருட்களும் விலை உயர்வை சந்தித்தன. இது சமையல் எண்ணெயிலும் எதிரொலித்தது.
இந்த நிலையில் மத்திய அரசாங்கம் கச்சா பாமாயில், கச்சா சோயாபீன் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய் ஆகியவை மீதான அடிப்படை சுங்க வரியை 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைத்தது. இந்த 3 கச்சா எண்ணெய்களுக்கான அனைத்து கட்டணங்கள் உள்ளடக்கிய இறக்குமதி வரி முன்பு 27.5 சதவீதமாக இருந்தது. சுங்கவரி குறைக்கப்பட்டதன் காரணமாக இனி 16.5 சதவீதமாக அது இருக்கும்.
இந்த வரி குறைப்பு கச்சா எண்ணெய்கள் மீது மட்டுமே இருக்கும் என்பதும், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் இறக்குமதி மீது இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது. உள்நாட்டு சுத்திகரிப்பு துறையை ஊக்கப்படுத்துவதற்காக கச்சா எண்ணெய் மீது சுங்கவரி குறைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே உள்நாட்டில் தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய் விலை குறைவாகவும், வெளிநாட்டில் இருந்து சுத்திகரித்து வரும் சமையல் எண்ணெய்களின் விலை அதிகமாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நுகர்வோருக்கு இது பெரிதும் பலனளிக்கும் என எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூறினர்.
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களுக்கான அடிப்படை சுங்க வரி 32.5 சதவீதமாக அப்படியே மாறாமல் உள்ளது. பயனுள்ள வரி 35.75 சதவீதமாக உள்ளது. இது குறித்து இந்திய காய்கறி எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதாகர் தேசாய் கூறுகையில், ''கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய்க்கு இடையிலான வரி வேறுபாட்டை 19.25 சதவீதமாக உயர்த்துவதற்கான எங்களது பரிந்துரையை ஏற்றுக்கொண்டதற்காக நாங்கள் அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிக்கிறோம்'' என்றார்.