
பனாமா சிட்டி,
மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பனாமா. இந்நாட்டில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தில் மறுசீரமைப்பு கொண்டுவரப்பட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டத்திற்கு எதிராக அந்நாட்டின் போகஸ் டெல் டொரொ மாகாணத்தில் பொதுமக்கள் , அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் அரசுக்கு எதிரானதாக மாறியது.
போராட்டக்காரர்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதுடன் வன்முறையிலும் ஈடுபட்டனர். விளையாட்டு மைதானம் தீ வைத்து எரிக்கப்பட்டது. கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. மாகாண விமான நிலையமும் தாக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் போராட்டக்காரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 30 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதனால், போகஸ் டெல் டொரொ மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.