
பெங்களூரு,
பெங்களூரு கெங்கேரி அருகே வசித்து வந்தவர் ஹரிணி (வயது 36). இவருக்கு திருமணமாகி தாசேகவுடா என்ற கணவரும், 2 குழந்தைகளும் உள்ளனர். இதற்கிடையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கெங்கேரியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் 3-வது நபர் மூலமாக ஹரிணிக்கும், தலகட்டபுராவை சேர்ந்த யசஷ் (25) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அப்போது 2 பேரும் தங்களது செல்போன் எண்ணை பரிமாறிக் கொண்டனர்.
அதன்பிறகு, 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி நண்பர்களாக மாறினார்கள். இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. தனது கணவருக்கு தெரியாமல் யசசை அவ்வப்போது சந்தித்து ஹரிணி பேசியுள்ளார். மேலும் ஓயோ ஓட்டலில் அறை எடுத்து 2 பேரும் உல்லாசமும் அனுபவித்து வந்துள்ளனர். தனது மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால், அவரை தாசேகவுடா கண்காணிக்க தொடங்கினார்.
அப்போது வேறோரு வாலிபருடன் கள்ளத்தொடர்பில் இருப்பதும், அவருடன் செல்போனில் அடிக்கடி பேசி வருவதும் தாசேகவுடாவுக்கு தெரியவந்துள்ளது. உடனே அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார். அத்துடன் ஹரிணியிடம் இருந்து தாசேகவுடா செல்போனையும் வாங்கி வைத்து கொண்டதாக தெரிகிறது. இதன் காரணமாக ஹரிணியை யசஷால் தொடர்பு கொள்ள முடியாமல் போனது.
கள்ளக்காதலியுடன் பேச முடியாமலும், அவரை பார்க்க முடியாமலும் போனதால் யசஷ் பித்து பிடித்தவர் போல மாறிப்போனதாக தெரிகிறது. இதற்கிடையில், நடந்த சம்பவங்களுக்கு தனது கணவரிடம் ஹரிணி மன்னிப்பு கேட்டுள்ளார். அந்த வாலிபருடன் பேச மாட்டேன் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். இதையடுத்து, ஹரிணியிடம், தாசேகவுடா செல்போனை கொடுத்துள்ளார்.
ஆனாலும் கள்ளக்காதலன் யசஷ் உடனான தொடர்பை கைவிட முடியாததால், அவரை ஹரிணி செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதையடுத்து, கடந்த 6-ந் தேதி கெங்கேரி அருகே பூர்ணபிரஜா லே-அவுட்டில் உள்ள ஓட்டலில் சந்தித்து பேசுவதற்கு 2 பேரும் முடிவு செய்தனர். அதன்படி, யசஷ் அந்த ஓட்டலில் அறை முன்பதிவு செய்தார். இதையடுத்து கடந்த 6-ந் தேதி 2 பேரும் ஓட்டலுக்கு சென்றுள்ளனர். அங்கு வைத்து 2 பேரும் உல்லாசம் அனுபவித்துள்ளனர்.
அப்போது கள்ளக்காதல் விவகாரம் கணவருக்கு தெரிந்ததும் தன்னிடம் இருந்து திடீரென விலகி இருந்தது ஏன்? என்பது குறித்து ஹரிணியிடம் யசஷ் கேட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த யசஷ் தன்னிடம் இருந்த கத்தியால் ஹரிணியை கண்மூடித்தனமாக பல முறை குத்தினார். இதில், சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
பின்னர் ஓட்டலில் இருந்து யசஷ் தப்பிச் சென்று விட்டார். ஆனால் யசஷ் முன்பதிவு செய்த அறை நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்ததால், சந்தேகம் அடைந்த ஊழியர்கள், நேற்று முன்தினம் காலையில் கதவை திறந்து பார்த்தார்கள். அப்போது ரத்த வெள்ளத்தில் ஹரிணி கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி உடனடியாக சுப்பிரமணியபுரா போலீசாருக்கு ஓட்டல் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து ஹரிணியின் உடலை கைப்பற்றி விசாாித்தனர். அப்போது ஹரிணியை அவரது கள்ளக்காதலன் யசஷ் தான் கொலை செய்திருப்பது தெரியவந்தது. மேலும் ஹரிணியை 17 முறை கத்தியால் குத்திக் கொலை செய்திருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து சுப்பிரமணியபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் இரவு யசசை கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் தெரியவந்துள்ளது.
அதாவது கைதான யசஷ் கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆவார். அவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அவருக்கு 2 குழந்தைகளின் தாயான ஹரிணியுடன் பழக்கம் ஏற்பட்ட பின்பு, தினமும் செல்போனில் பேசுவது, குறுந்தகவல்கள் அனுப்புவதை வாடிக்கையாக வைத்திருந்தார். அத்துடன் ஹரிணியுடன் பல இடங்களுக்கும் அவர் சுற்றி திரிந்துள்ளார்.
இந்த விவகாரம் கணவருக்கு தெரிந்ததும், தன்னிடம் இருந்து ஹரிணி விலகி சென்றதால், அவரை தீர்த்து கட்டுவதற்கு யசஷ் முடிவு செய்துள்ளார். தனக்கு கிடைக்காத ஹரிணி வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்ற முடிவுக்கு வந்துள்ளார்.
இதற்காக காத்திருந்த யசஷ் கடந்த 6-ந் தேதி இரவு ஓட்டலுக்கு வருவதாக ஹரிணி சொன்னதும், அவரை தீர்த்து கட்டுவதற்காக கத்தியுடன் ஓட்டலுக்கு வந்துள்ளார். அங்கு ஹரிணியுடன் உல்லாசம் அனுபவித்து விட்டு 17 முறை அவரை குத்திக் கொன்றது தெரியவந்துள்ளது. விசாரணைக்கு பின்பு நேற்று மாலையில் யசஷ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேற்கண்ட தகவலை தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் லோகேஷ் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்தார்.