
சண்டிகார்,
பஞ்சாபின் லூதியானா மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. குர்பிரீத் சிங் கோகி கடந்த ஜனவரியில், தற்செயலாக துப்பாக்கியால் சுட்டதில் பலியானார். இதனால், காலியான அந்த தொகுதிக்கு வருகிற 19-ந்தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் சண்டிகாரில் செய்தியாளர்களின் சந்திப்பில் பேசும்போது, சிந்தூர் பெயரை கொண்டு வாக்குகளை பெற பா.ஜ.க. திட்டமிட்டு உள்ளது என குற்றச்சாட்டாக கூறினார்.
அவரிடம் நிருபர்கள், பஞ்சாபின் லூதியானா நகரில் பா.ஜ.க.வினர்,தேர்தல் பிரசாரத்தின்போது ஆபரேஷன் சிந்தூரை பயன்படுத்துவது பற்றி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து கூறும்போது, இந்த பிரசாரம் பற்றி ஒவ்வொருவரும் கிண்டல் செய்து வருகின்றனர்.
நீங்கள் இதனை (சிந்தூர்) எடுத்து கொண்டு சென்று உங்கள் மனைவியிடம் கொடுத்து, மோடியின் பெயரால் எடுத்து கொள் என கூறுவீர்களா? என அந்த நிருபரிடம் திருப்பி கேட்டுள்ளார். இது என்ன ஒரு நாடு-ஒரு கணவர் திட்டமா?, சிந்தூரின் பெயரால் வாக்குகளை கேட்பது. எல்லாவற்றிற்கும் எல்லை உள்ளது என அவர் கூறினார். அவருடைய இந்த பேச்சால் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.
இதற்கு முன் ஆம் ஆத்மியின் எம்.பி. சஞ்சய் சிங் கூறும்போது, ஒரே நாடு, ஒரே மந்திரி, ஒரே நாடு, ஒரே ரேசன் என்பதுபோன்று, ஒரே நாடு, ஒரே கணவனா? என கூறினார்.
பஹல்காம் தாக்குதலின்போது, பயங்கரவாதிகள் ஆண்களை இலக்காக கொண்டு, அவர்களின் மதம் என்னவென்று கேட்டு படுகொலையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, இந்திய ஆயுத படைகள் தரப்பில் பயங்கரவாதிகளை இலக்காக கொண்டு, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை எடுக்கப்பட்டது.