
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் அவினாசி கைகாட்டிபுதூரை சேர்ந்தவர் அண்ணாதுரை. தொழில் அதிபரான இவர் பனியன் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவரது மகள் ரிதன்யா (வயது 27). இவருக்கும் கைகாட்டிபுதூர் ஜெயம்கார்டன் பகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி-சித்ரா தேவி தம்பதியின் மகன் கவின்குமார் (27) என்பவருக்கும் கடந்த 2½ மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் செய்த மகள் சந்தோஷமாக வாழ்க்கை நடத்துவாள் என அவரது பெற்றோர் கனவு கண்டனர்.
ஆனால் அது கானல் நீராகி போனது. திருமணத்திற்கு பின்னர் ரிதன்யா சந்தோஷமாக வாழவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் தனது கணவர் கவின்குமார் உடல் ரீதியாகவும், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் மன ரீதியாகவும் கடுமையான சித்திரவதை செய்து வந்ததாகவும், இனி இந்த வாழ்க்கையை தன்னால் வாழ முடியாது என தன் தந்தையிடம் ரிதன்யா பலமுறை கூறிவந்துள்ளார். ஆனாலும் பெற்றோர் தனது மகளிடம் சில நாட்களில் எல்லாம் சரியாகி விடும், கவலைப்படாதே என்று ஆறுதல் கூறினர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ரிதன்யா சேவூர் அருகே தாளக்கரையில் உள்ள லட்சுமிநரசிம்மர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய காரில் வழக்கம்போல் சென்றார். காரை அவரே ஓட்டினார். அதன்பின்னர் மொண்டிபாளையத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்றார். அங்கு செட்டிபுதூர் பகுதியில் காரை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு காரில் இருந்தபடி விஷத்தை குடித்து, காருக்குள்ளேயே வாயில் நுரை தள்ளியபடி ரிதன்யா மயங்கி கிடந்தார்.
நீண்டநேரமாக கார் நிற்பதை பார்த்த அந்தபகுதியினர் சேவூர் போலீஸ் நிலையம் மற்றும் ரிதன்யாவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது ரிதன்யா இறந்து விட்டது தெரியவந்தது. அவர்கள் தனது மகள் உடலை பார்த்து அழுது புரண்டது பார்ப்போர் நெஞ்சை கலங்க வைத்தது.
இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பெண் வீட்டார் கூறிய திடுக்கிடும் தகவல்கள் குறித்து போலீசார் கூறியதாவது:-
ரிதன்யாவுக்கும் கவின்குமாருக்கும் 2½ மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது வரதட்சணையாக பெண்ணின் வீட்டில் 500 பவுன் நகை தருவதாக கூறி 300 பவுன் நகை போட்டுள்ளனர். ரூ.70 லட்சம் மதிப்பிலான சொகுசு கார் மற்றும் ரூ.2½ கோடி செலவு செய்து மிகவும் ஆடம்பரமாக திருமணம் செய்து வைக்கப்பட்டது. ஆனால் என்னவோ ரிதன்யா சந்தோஷமாக வாழவில்லை. திருமணம் நடைபெற்ற 10 நாட்களில் இருந்து அவரது முகத்தில் சோகம் தென்பட்டது.
மாமனாரும், மாமியாரும் ரிதன்யாவிடம் மீதமுள்ள 200 பவுன் நகை இன்னும் தரவில்லை என்று கூறி சித்ரவதை செய்து, எதற்கெடுத்தாலும் திட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் கணவர், மாமனார், மாமியார் ஆகிய 3 பேரும் அமர்ந்திருக்க ரிதன்யாவை ஒரு மணி நேரம் நிற்க வைத்து மனரீதியாக துன்புறுத்தி வந்ததாகவும், கவின்குமார் குடும்பத்திற்கு வாடகை மூலம் மாதாந்திர வருமானம் இருந்ததாகவும், இதன் காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து முழுநேரமும் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் ரிதன்யா தற்கொலை செய்யும் முன்பு தனது தந்தைக்கு அனுப்பிய வாட்ஸ் ஆப்பில் "மற்றொரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க உடன்பாடு இல்லை. ஒருவனுக்கு ஒருத்தி தான் என்றும் தன் சாவிற்கு தனது கணவன் மற்றும் மாமனார், மாமியார் தான் காரணம் என்று உருக்கமாக அனுப்பி இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் ரிதன்யா அனுப்பிய ஆடியோவை கேட்டவர்கள் நெஞ்சம் உறைந்து போய் தானாக தற்கொலை செய்யவில்லை கவின் குமார் மற்றும் அவரது பெற்றோர் அனைவரும் சேர்ந்து மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருப்பதும், கவின் குமார் உடல்ரீதியாக துன்புறுத்தல் கொடுத்ததும் தெரிய வந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.