
மும்பை,
விராட் கோலிக்கு அடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் இந்திய அணி 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றது.
2024 டி20 உலகக்கோப்பையை வென்ற பின்னர் சர்வதேச டி20 போட்டிகளில் ரோகித் ஓய்வு பெற்றார். தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என அறிவித்திருந்தார். இதனிடையே யாரும் எதிர்பாராத வண்ணம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா கடந்த 7-ம் தேதி அறிவித்தார்.
எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் வரை ரோகித் கேப்டனாக இருப்பார் என்று அனைவரும் நினைத்த வேளையில் அவர் ஓய்வை அறிவித்தது பலரது மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது 38 வயதான ரோகித் சர்மா 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரை விளையாடுவதை இலக்காக கொண்டுள்ளார்.
இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது? என்பது குறித்து சில கருத்துகளை ரோகித் சர்மா பகிர்ந்துள்ளார்.
இது குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "ஆரம்ப காலங்களில் நான் நேரம் எடுத்து விளையாடுவேன். அப்போதெல்லாம் முதல் 10 ஓவரில் 30 பந்துகளை எதிர்கொண்டு 10 ரன்கள் அடித்தாலும் பரவாயில்லை என்ற வகையில் விளையாடுவேன். ஆனால் இப்போது 20 பந்துகளை எதிர்கொண்டால் என்னால் ஏன் 30, 35, 40 ரன்களை அடிக்க முடியாது. நன்றாக விளையாடும் நாட்களில் முதல் 10 ஓவர்களில் நான் 80 ரன்கள் அடிப்பது மோசமானது கிடையாது. இதைத்தான் நான் செய்து வருகிறேன். அந்த வழியில் எனக்கு கிடைக்கும் ரன்கள் போதுமானது. தற்போது நான் கிரிக்கெட்டை முற்றிலும் வித்தியாசமான வழியில் விளையாடுகிறேன்.
எதையும் முழுமையாக கிடைத்ததாக நான் எடுத்துக் கொள்வதில்லை. அனைத்தும் ஒரே வழியில் செல்லும் என்று நான் கருதுவதில்லை. தொடர்ச்சியாக விளையாடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய 20 - 30 ரன்களை அடிக்கும் வரை விளையாடுவேன். ஆனால் இந்திய அணியின் வெற்றிக்கு பங்களிக்க முடியாது என தோன்றும்போது நான் ஓய்வு பெற்று விடுவேன். அது நிச்சயம். ஆனால் இப்போது, நான் என்ன செய்கிறேன் என்பது எனக்கு தெரியும். இப்போது என்னால் அணிக்கு உதவ முடிகிறது" என்று கூறினார்.