ஒரு மாதமாக சுற்றியவர் ராமேஸ்வரத்தில் சிக்கினார்; விசா இல்லாமல் இந்தியாவிற்கு விசிட் அடித்த அமெரிக்கர் கைது

1 day ago 3

ராமேஸ்வரம்: விசா இல்லாமல் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து, ஒரு மாதமாக சுற்றித் திரிந்த அமெரிக்கர் ராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்டார். ராமேஸ்வரம் – தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள பச்சைப்பட்டி என்னும் இடத்தில் நேற்று முன்தினம் மாலை வெளிநாட்டு சுற்றுலாப்பயணி ஒருவர் சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்துள்ளார். அப்போது வழக்கமான ரோந்து பணிக்கு சென்ற மரைன் போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். இதில், அவர் அமெரிக்க நாட்டின் மிஸ்ஸிஸிப்பி என்னும் பகுதியை சேர்ந்த லூசிபர்(40) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்த பாஸ்போர்ட்டை விசாவை சோதனை செய்ததில், முறையான விசா இல்லாமல் அவர் இந்தியாவில் சுற்றி வந்தது தெரிந்தது. இதையடுத்து ராமேஸ்வரம் மரைன் போலீசார், அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று கூடுதல் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் கடந்த பிப்.16ம் தேதி அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு புறப்பட்ட அவரை முறையான விசா இல்லாததால், அமெரிக்க விமான நிலைய அதிகாரிகள் பயணத்தை ரத்து செய்து திருப்பி அனுப்பியுள்ளனர். பின் அவர் அங்கிருந்து பாங்காங் சென்று, அங்கிருந்து நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளார். நேபாளத்திலிருந்து கும்பமேளாவிற்கு சென்ற சாதுக்களுடன் கலந்து உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு சென்று கும்பமேளா நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். அங்கிருந்து ரயில் மற்றும் பஸ் மூலமாக கன்னியாகுமரி சென்று விட்டு ராமேஸ்வரம் வந்துள்ளார். தனுஷ்கோடி கடல் வழியாக படகில் இலங்கை செல்லும் திட்டத்துடன் அவர் ராமேஸ்வரம் வந்திறங்கியது விசாரணையில் தெரியவந்தது.

ஒன்றிய, மாநில புலனாய்வு பிரிவு போலீசாரின் விசாரணைக்கு பின் தனுஷ்கோடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து போலீசார் லூசிபர் மீது பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிந்து நேற்று முன்தினம் இரவு புழல் சிறையில் அடைத்தனர்.

The post ஒரு மாதமாக சுற்றியவர் ராமேஸ்வரத்தில் சிக்கினார்; விசா இல்லாமல் இந்தியாவிற்கு விசிட் அடித்த அமெரிக்கர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article