ஜெருசலேம்: சனிக்கிழமைக்குள் பணய கைதிகள் அனைவரையும் ஹமாஸ் விடுவிக்கா விட்டால் காசா மீது மீண்டும் போர் நடத்தப்படும் என இஸ்ரேல் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் போர் கடந்த 2023 அக்டோபர் 7ம் தேதி தொடங்கி 21 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்தது. இதில் அப்பாவி பொதுமக்கள் பலியாகி வந்தனர். போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, கத்தார், எகிப்து நாடுகள் ஹமாஸ் – இஸ்ரேலுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் கடந்த மாதம் 16ம் தேதி போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தப்படி, முதற்கட்டமாக 42 நாள்களில்(6 வாரம்) 33 இஸ்ரேல் பணய கைதிகளை விடுவிக்க ஹமாசும், அதற்கு இணையாக இஸ்ரேல் சிறையில் உள்ள 1,904 பாலஸ்தீனர்களை விடுதலை செய்ய இஸ்ரேலும் ஒப்பு கொண்டன.
அதன்படி தற்போது வரை 21 இஸ்ரேல் பணய கைதிகளை ஹமாஸ் அமைப்பும், அதற்கு ஈடாக 730 பாலஸ்தீனர்களை இஸ்ரேலும் விடுதலை செய்துள்ளன. போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, இரண்டாம் கட்டமாக ஹமாஸ் வசமுள்ள இஸ்ரேல் பணய கைதிகள் அனைவரையும் விடுவிப்பது மற்றும் காலவரையற்ற போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டிருந்தது. இதனிடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாலஸ்தீனர்களை கொன்ற இஸ்ரேல் ராணுவம், காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைப்பதையும் தடுப்பதாக குற்றம்சாட்டி உள்ள ஹமாஸ், வரும் சனிக்கிழமை 3 இஸ்ரேல் பணய கைதிகளை விடுவிக்க முடியாது என தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப், “சனிக்கிழமைக்குள் அனைத்து இஸ்ரேல் பணய கைதிகளையும் விடுவிக்கா விட்டால், போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, காசா மீது தாக்குதல் நடத்தப்படும்” என நேற்று முன்தினம் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் காசா மீது போர் தொடரும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து நெதன்யாகு அலுவலகம் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் பணய கைதிகளை விடுவிக்கா விட்டால் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவோம். ஹமாஸ் மீது போரை தொடங்க காசா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்த தயாராக இருக்கும்படி ராணுவத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஒரு மாதத்துக்குள் முடிவுக்கு வரும் போர் நிறுத்தம்; காசா மீது மீண்டும் போர் தொடங்குவோம்: இஸ்ரேல் பகிரங்க மிரட்டல் appeared first on Dinakaran.