மதுரை: ஒரு சமுதாயத்தினரின் ஓட்டுக்கள் வேண்டும் என்பதற்காகத்தான் தேர்தல் நேரத்தில் பாஜவை விட்டு அதிமுகவினர் விலகினர் என்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று நடந்த கட்சி நிர்வாகி திருமணத்தில் பங்கேற்ற பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஒரு சமுதாயத்தினரின் ஓட்டுக்கள் வேண்டும் என்பதற்காகத்தான் தேர்தல் நேரத்தில் பாஜ கூட்டணியை விட்டு அதிமுகவினர் விலகினர்.
மைனாரிட்டியினரிடம் இருந்து வாக்குகள் வேண்டும் என்பதற்காகவே அவர்கள் விலகினர். நாம் நாமாக இருந்தால் இந்துக்கள் மட்டுமல்ல, இஸ்லாமியர்களும் ஆதரவு தருவார்கள். கொள்கை ரீதியான அரசியலை நாங்கள் முன்னெடுத்து இருக்கின்றோம். அறநிலையத்துறையை அகற்றுவோம் என்கின்ற நிலையை எத்தனை கட்சிகள் ஏற்றுக்கொள்ளும்? எங்களைப் பொறுத்தவரை ஒரு தனி பாதையில் பயணிக்கிறோம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பொறுத்தவரை, 9 மாதத்திற்காக சட்டமன்ற உறுப்பினர் தேர்வு வேண்டாத வேலை.
இந்த தேர்தலை நாங்கள் அப்படித்தான் பார்க்கிறோம். மீனாட்சி கோயிலில் ஆகம விதிப்படி முறையான கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். இதற்கு முன்பு தீவிபத்து ஏற்பட்ட பகுதியில் அதை முழுமையாக சரி செய்ய வேண்டும். பதவி என்பது வெங்காயம். உரித்து பார்த்தால் ஒன்றும் இருக்காது. நல்ல பணி செய்யக்கூடிய கவர்னரை ஏன் மாற்றவேண்டும்? தமிழகத்திற்கு போதிய நிதியை ஒன்றிய அரசு வழங்கி வருகிறது. எந்தத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என்று தெளிவாக கூறட்டும். இவ்வாறு தெரிவித்தார்.
The post ஒரு சமுதாய ஓட்டுக்களுக்காகதான் கூட்டணியிலிருந்து அதிமுக விலகல்: அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.