ஒன்றிய அரசு நிதியை வழங்க மறுப்பது நியாயமல்ல; தமிழ்நாடு அரசின் பக்கம்தான் நியாயம் உள்ளது: ராமதாஸ் ஆதரவு

4 hours ago 1


சென்னை: ஒன்றிய அரசு நிதியை வழங்க மறுப்பது நியாயமல்ல; தமிழ்நாடு அரசின் பக்கம்தான் நியாயம் உள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கு இணையவசதி ஏற்படுத்துவதற்காக கட்டணங்களை உள்ளாட்சி அமைப்புகளே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் 24 ஆயிரத்து 338 அரசு தொடக்கப்பள்ளிகளும், 6992 அரசு நடுநிலைப் பள்ளிகளும், 3129 அரசு மேல்நிலைப் பள்ளிகளும் என 37 ஆயிரத்து 553 அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பான்மையான பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள், உயர் தொழில்நுட்ப கம்ப்யூட்டர் ஆய்வகம் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள பள்ளிகளிலும் அத்தகைய கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

24,338 அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு இணைய வசதி பெறுதல் மற்றும் 14,665 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கும், 4,934 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கும் இணைப்புக் கட்டணம் மற்றும் ஒருமுறைக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் போதிய நிதியும், வருவாயும் இல்லாமல் வளர்ச்சிப் பணிகள் முடங்கிக் கிடக்கின்றன. இந்த நிலையில் இணைய வசதிக் கட்டணத்தையும் உள்ளாட்சி அமைப்புகளே ஏற்க வேண்டும் என்றால், அதை ஊரக உள்ளாட்சி அமைப்புகளால் ஏற்க முடியாது. அதனால், ஊரக உள்ளாட்சிகளில் அடிப்படை வசதிகளைக் கூட செய்ய முடியாத நிலை உருவாகும். அதை அரசு தவிர்க்க வேண்டும்.தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கான இணைய வசதிக் கட்டணம் ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதியிலிருந்து வழங்கப்பட்டு வந்தது.

மும்மொழிக் கொள்கையை செயல்படுத்த தமிழக அரசு மறுத்துவிட்டதையடுத்து அந்த நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி விட்டது. அத்தகைய சூழலில் இணையவசதிக் கட்டணத்தை தமிழக அரசு தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை. அதே நேரத்தில் மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தும் பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை ஏற்க மறுப்பதற்காக தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு மறுப்பது நியாயமல்ல. இந்த விவகாரத்தில் தமிழக அரசின் பக்கம் தான் நியாயம் உள்ளது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்குத் தொடர்ந்தால் தமிழகத்திற்கான நிதி உடனடியாக கிடைத்து விடும். எனவே, அரசு பள்ளிகளுக்கான இணைய வசதிக் கட்டணத்தை உள்ளாட்சி அமைப்புகள் தான் ஏற்க வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட அரசாணையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதியைப் பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

The post ஒன்றிய அரசு நிதியை வழங்க மறுப்பது நியாயமல்ல; தமிழ்நாடு அரசின் பக்கம்தான் நியாயம் உள்ளது: ராமதாஸ் ஆதரவு appeared first on Dinakaran.

Read Entire Article