ஒன்றிய அரசின் அவசர அழைப்பின் பேரில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்

2 months ago 9

சென்னை: ஒன்றிய அரசின் அவசர அழைப்பின்பேரில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாட்கள் பயணமாக நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்று மாலை 4.55 மணியளவில் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் ஆளுநரின் தனி செயலாளர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் சென்றனர். 4 நாட்கள் பயணமாக, டெல்லி செல்லும் ஆளுநரின் திடீர் பயணம் குறித்து, அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆனால் ஒன்றிய அரசின் அவசர அழைப்பின் பேரில், டெல்லி புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட, 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நீண்ட காலம் நிலுவையில் வைத்திருந்தது குறித்து, டெல்லி உச்சநீதிமன்றம் கடந்த வாரம் பரபரப்பான தீர்ப்பை அளித்து, ஆளுநரின் செயலை கண்டித்தது. இது தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் இல்லையேல், அவராகவே பதவி விலக வேண்டும், என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் கடந்த வாரத்திலேயே, ஆளுநர் டெல்லி செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஆளுநர் தற்போது திடீரென டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். டெல்லியில் உள்துறை அமைச்சர் மற்றும் சட்ட நிபுணர்களை ஆளுநர் சந்திக்க உள்ளதாகவும், 4 நாள் பயணம் முடிந்து வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னை திரும்புவார் என்றும் ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

The post ஒன்றிய அரசின் அவசர அழைப்பின் பேரில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம் appeared first on Dinakaran.

Read Entire Article