ஒகேனக்கல் காவிரியில் 2வது நாளாக குளிக்க தடை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 18,220 கனஅடியாக அதிகரிப்பு

4 hours ago 2

மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியாக உள்ள நிலையில், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று காலை 18,220 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 113.69 அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் பருவமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று காலை 2,279 அடியாக உயர்ந்துள்ளது. அணை நிரம்பும் நிலையில் இருப்பதால், பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 17ம் தேதி விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் வெளியேற்றப்பட்ட நிலையில், நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பால், கடந்த 18ம் தேதி முதல் கபினியிலிருந்து 25,000 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அதேபோல், 124.80 அடி கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 117.40 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 23,473 கனஅடி வீதம் நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து 1201 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. கபினி, கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் இரவு தர்மபுரி மாவட்ட எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் காவிரிக்கு வந்தடைந்தது. இதனால், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கடந்த 18ம் தேதி விநாடிக்கு 6,040 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று முன்தினம் காலை 6,829 கனஅடியானது. தொடர்ந்து 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. நேற்று காலை 10 மணி நிலவரப்படி விநாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, பிற்பகல் 3 மணியளவில் 17 ஆயிரம் கனஅடியாகவும், மாலை 6 மணியளவில் 18ஆயிரம் கனஅடியாகவும், இரவு 8 மணி நிலவரப்படி 19 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரித்தது. இன்று காலை நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியாக உள்ளது. இதனால், மெயினருவி மற்றும் சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரியில் குளிக்க விதிக்கப்பட்டுள்ள தடை இன்று 2வது நாளாக நீடிக்கிறது.

அதேசமயம் கடந்த 17ம் தேதி காவிரியில் திறக்கப்பட்ட கபினிநீர் காலை மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கியது. நேற்று முன்தினம் 6,829 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 8,218 கனஅடியாகவும், மாலை 4 மணியளவில் 16,341 கனஅடியாகவும் அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 18,220 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது நேற்று காலை 113.58 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 113.69 அடியாக அதிகரித்துள்ளது. நீர்இருப்பு 83.60 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

The post ஒகேனக்கல் காவிரியில் 2வது நாளாக குளிக்க தடை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 18,220 கனஅடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article