
சென்னை,
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'லூசிபர்'. இந்த படத்தின் மூலம் பிருத்விராஜ் இயக்குனராக அறிமுகமானார். தற்போது, இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராகி இருக்கிறது. இந்த படத்திற்கு 'எல் 2 எம்புரான்' என பெயரிடப்பட்டுள்ளது. இதில், மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் பான் இந்திய அளவில் வருகிற 27-ந் தேதி வெளியாக உள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதில் மோகன்லால் 'குரேஷி ஆபிராம் ஏ.கே. ஸ்டீபன் நெடும்பள்ளி' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், இப்படம் வருகிற 27-ந் தேதி உலகளவில் ஐமேக்ஸ் திரையில் வெளியாக உள்ளது. இந்த படம் தான் மலையாள சினிமாவில் முறையாக ஐமேக்ஸ் திரையில் வெளியாக படமாகும். இது குறித்த பதிவை நடிகர் மோகன்லால் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் "எல் 2 எம்புரான் மலையாளத் திரையுலகில் இருந்து ஐமேகஸ்-ல் வெளியாகும் முதல் திரைப்படமாக இருக்கும் என்பதை அறிவிப்பதில் எங்களுக்குப் பெருமிதம். இது ஐமேக்ஸ் மற்றும் மலையாள சினிமா இடையே ஒரு நீண்ட மற்றும் புகழ்பெற்ற தொடர்பின் தொடக்கமாக இருக்கும் என்று நம்புகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.