
முல்லான்பூர்,
10 அணிகள் பங்கேற்ற 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் நடைபெற்ற இறுதிப்போட்டிக்கான முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டது.
இதனையடுத்து பஞ்சாப் மாநிலம் முல்லான்பூரில் இன்று நடைபெறும் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடித்த குஜராத் டைட்டன்ஸ் அணி, 4-வது இடம் பெற்ற மும்பை இந்தியன்சை சந்திக்கிறது.
இந்த ஆட்டத்தில் தோல்வி அடையும் அணி வெளியேறும். வெற்றி பெறும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோற்ற பஞ்சாப் அணியுடன் மோதும். இந்த மோதலில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு 2-வது அணியாக தகுதி பெறும்.
முன்னாள் சாம்பியனான குஜராத் அணி 14 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 5 தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்று 3-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. 5 முறை சாம்பியனான மும்பை அணி 14 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 6 தோல்வியுடன் 16 புள்ளிகள் எடுத்து 11-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது. சமபலம் வாய்ந்த இரு அணிகளும் மோத உள்ளதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.