
சென்னை,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த 3-ம் தேதி நிறைவு பெற்றது. இதன் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கோப்பையை கைப்பற்றியது.
இந்த சீசனில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9-வது இடம் பிடித்து வெளியேறியது. இந்த சீசனில் பெரும்பாலான போட்டிகளை காயம் காரணமாக சஞ்சு சாம்சன் தவறவிட்டார். சாம்சன் இல்லாத சமயத்தில் ரியான் பராக் அணியை வழிநடத்தினார்.
முன்னதாக இந்த சீசனில் ராஜஸ்தான் அணி நிர்வாகத்திற்கும் சஞ்சு சாம்சனுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது. அத்துடன் தலைமை பயிற்சியாளர் ஆன ராகுல் டிராவிட் - சஞ்சு சாம்சன் இடையேயும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இதனால் அவர் அடுத்த சீசனுக்கு முன்னதாக ராஜஸ்தான் அணியிலிருந்து விலக முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. அத்துடன் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைய உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் சஞ்சு சாம்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ள பதிவு சென்னை அணியின் ரசிகர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பதிவில் தனது மனைவியுடன் சாலை ஓரம் இருக்கும் மஞ்சள் நிற கோட்டை கடக்குமாறு ஒரு புகைப்படத்தை பகிர்ந்து "நகர வேண்டிய நேரம்" என்ற தலைப்புடன் பதிவிட்டுள்ளார்.
இதனால் அவர் ராஜஸ்தான் அணியிலிருந்து விலகி சென்னை அணியில் இணைய உள்ளாரோ? என்று ரசிகர்களிடையே சந்தேகம் வலுத்துள்ளது.