
முல்லான்பூர்,
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் மாநிலம் முல்லான்பூரில் நேற்று இரவு நடந்த இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப் கிங்ஸ், 2-வது இடம் பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி, பெங்களூரு வீரர்களின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 14.1 ஓவர்களில் 101 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக ஸ்டோய்னிஸ் 26 ரன்கள் அடித்தார். பெங்களூரு அணி தரப்பில் ஹேசில்வுட், சுயாஷ் ஷர்மா தலா 3 விக்கெட்டுகளும், யாஷ் தயாள் 2 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார், ரொமாரியோ ஷெப்பர்டு தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 102 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 106 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. பில் சால்ட் 56 ரன்களுடனும், ரஜத் படிதார் 15 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். பெங்களூரு சுழற்பந்து வீச்சாளர் சுயாஷ் ஷர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்த ஆட்டத்தில் பில் சால்ட் 48 ரன்கள் அடித்திருந்தபோது ஐ.பி.எல். தொடரில் 1,000 ரன்களை கடந்தார். இந்த 1,000 ரன்களை வெறும் 576 பந்துகளில் அடித்துள்ளார். இதன் மூலம் இந்த மைல்கல்லை வேகமாக எட்டிய 3-வது வீரர் என்ற சாதனையை கிளாசென் (594 பந்துகள் மற்றும் சேவாக்கை (604 பந்துகள்) முந்தி படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:
1. ரசல் - 545 பந்துகள்
2. டிராவிஸ் ஹெட் - 575 பந்துகள்
3. பில் சால்ட் - 576 பந்துகள்
4. கிளாசென் - 594 பந்துகள்
5. சேவாக் - 604 பந்துகள்